மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம்!

மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம்!

ஆலோசனை கூட்டம் 

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (17.5.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தமிழ்நாடு அரசின் சார்பில் வீடு கட்டுவதற்காக ஆணை வழங்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்ததாவது, தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளுக்காக பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அதன்படி, மாற்றுத்திறனாளிகளுக்கு அரசால் ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு பயனாளியின் பங்குத் தொகையினை செலுத்துவதற்கு வட்டியில்லா வங்கிக்கடனுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தபடவுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், வீட்டு வசதி வாரியம் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைகள் மூலம் வீடு ஒதுக்கீட்டு ஆணை பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தனிநபர் பிணையத்திலிருந்து விலக்கு பெற்றிடும் வகையில் அரசால் வீடு ஒதுக்கீடு பெற்ற ஆணை அல்லது மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர ஓய்வூதிய ஆணை ஆகியவற்றை மாற்றுத்திறனாளிகள் பிணையமாக தொடர்புடைய வங்கிகளில் சமர்ப்பித்து வட்டியில்லா வங்கி கடனுதவி பெறலாம்.

இந்த கடனுதவியின் மூலம் மாற்றுத்திறனாளிகள் அதிகபட்சம் ரூ.1.௫௦ இலட்சம் 5 வருட காலத்திற்கு பெறப்படும் வட்டியில்லா கடன் தொகையினை திருப்பி செலுத்தி பயன்பெறலாம். மேலும், இத்திட்டம் குறித்த தகவல்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறை எண்:06 தரைதளத்தில் இயங்கி வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அல்லது தொலைபேசி எண்: 04286-280019என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

இக்கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் (வீடுகள்) த.பாலகுரு, சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் சு.மதேஸ்வரன், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் உதவி பொறியாளர் பி.செந்தில்குமார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக இளநிலை மறுவாழ்வு அலுவலர் ரா.பிரகாஷ் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story