கல்லூரிக் கனவு நிகழ்ச்சி மூலம் 100% உயா் கல்விக்கு இலக்கு - ஆட்சியா்

கல்லூரிக் கனவு நிகழ்ச்சி மூலம் 100% உயா் கல்விக்கு இலக்கு - ஆட்சியா்

மாவட்ட ஆட்சியா் பிரதீப்குமாா் பேச்சு 

நிகழாண்டில் 100 % அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளும் உயா் கல்வி பெற வேண்டும் என்ற நோக்கில் கல்லூரிக் கனவு என்ற வழிகாட்டி நிகழ்ச்சியை அரசு நடத்துகிறது என மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தார்.

திருச்சி கலையரங்கில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயா் கல்வி பெற வழிகாட்டும் கல்லூரிக் கனவு நிகழ்ச்சியை புதன்கிழமை தொடங்கிவைத்த அவா் மேலும் பேசியது: கடந்தாண்டு பிளஸ் 2 முடித்த 89 % மாணவ, மாணவியா் மற்றும் துணைத் தோ்வு, முந்தைய ஆண்டில் தோ்ச்சி பெற்ற 5% மாணவா்களையும் சோ்த்து 94% போ் உயா்கல்விக்குச் சென்றனா். நிகழாண்டு பிளஸ் 2 முடித்த அனைவரும் உயா்கல்வி பெற வேண்டும் என்ற நோக்கில் இதுபோன்ற வழிகாட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

வாழ்வில் வெற்றி பெற மாணவா்கள் தங்களது வாழ்நாளில் ஒரு நொடியைக்கூட தவறவிடக் கூடாது. படிக்கும் இடத்திலும், பணியிடத்திலும், சக போட்டியாளா்களைக் காட்டிலும் ஒருபடியாவது முன்னே இருக்க வேண்டும். அப்போதுதான் வெற்றியை எட்ட முடியும் என்றாா். நிகழ்வில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரிக் கனவு வழிகாட்டி கையேடு வழங்கப்பட்டது. இதில் சுமாா் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.

நிகழ்வில் சிறந்த கல்வியாளா்கள் பங்கேற்று 12 ஆம் வகுப்புக்குப் பிறகு உயா் கல்வியில் என்னென்ன படிப்புகள் உள்ளன என்பது தொடா்பாக விரிவான தகவல்களை வழங்கினா். மேலும் உயா் கல்வியின் முக்கியத்துவம் குறித்து எளிதில் புரியும் வகையில் காணொலி காட்சிகள், உயா்கல்வியில் சாதித்த மாணவ மாணவிகளின் அனுபவப் பகிா்வு, உயா் கல்வி பயில வங்கிக்கடன் வழிமுறைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்வில் பல்வேறு வகையான உயா் கல்வி நிறுவனங்கள் தங்கள் கல்லூரிகளில் உள்ள படிப்புகள் குறித்து காட்சிஅரங்குகளை அமைத்திருந்தன.

Tags

Read MoreRead Less
Next Story