திருச்செங்காட்டங்குடி உத்திராபதீஸ்வரர் கோயிலில் அமுது படையல் விழா

திருச்செங்காட்டங்குடி உத்திராபதீஸ்வரர் கோயிலில் அமுது படையல் விழா

 உத்திராபதீஸ்வரர் 

நாகை மாவட்டம் திருச்செங்காட்டங்குடி உத்திராபதீஸ்வரர் கோவிலில் அமுது படையல் விழா செவ்வாய்க் கிழமை தொடங்கி புதன் கிழமை அதிகாலை நிறைவடைந்தது.

அமுது படையல்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடியில் உத்திராபதீஸ்வரர் கோயில் உள்ளது.பல்லவ மன்னனின் படைத் தளபதியாக இருந்து சிவத்தொண்டராக மாறிய பரஞ்சோதி என்ற சிறுத்தொண்ட நாயனார் அவதரித்த தலம் இது. சிறுத்தொண்டரின் சிவபக்தியை வெளிப்படுத்த பிள்ளைக் கனியமுது கேட்டு இறைவன் சிவபெருமான் திருவிளையாடல் நிகழ்த்தி சிறுத்தொண்டருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் காட்சியளித்த இத்தலத்தில்,இறைவன் பிள்ளைக் கனியமுது கேட்ட ஐதீக நிகழ்வு, சித்திரை பரணி பெருவிழா அமுது படையல் நிகழ்ச்சியாகக் கொண்டாடப்படுகிறது.

நிகழாண்டுக்கான சித்திரை பரணி பெருவிழா கடந்த 2- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழா நிகழ்ச்சியாக தினமும் காலையில் பஞ்ச மூர்த்திகள் வீதியுலாவும்,இரவில் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலாவும் நடைபெற்றன.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அமுது படையல் விழா செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது.விழாவையொட்டி உத்திராபதீஸ்வரர் சுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.பின்னர் அமுது கேட்க சிறுத்தொண்டர் மடத்துக்கு சுவாமி வெள்ளை சாற்றி புறப்பாடாகும் நிகழ்ச்சி நடைபெற்றது.இறைவனுக்கு சிறுத்தொண்டர் பிள்ளைக் கனியமுது படைத்த அமுது படையல் நிகழ்ச்சி புதன் கிழமை அதிகாலை சுமார் 2 மணிக்கு நடைபெற்றது.தொடர்ந்து இறைவன் சிவபெருமான் ரிஷப வாகனத்தில் காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்களும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சிவத்தொண்டர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். வேளாக்குறிச்சி ஆதீனம் 18-வது குருமகா சன்னிதானம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சாமிகள் மேற்பார்வையில் ஆதீன இளவரசு அஜபா நடேஸ்வர சாமிகள் மற்றும் கோயில் ஊழியர்கள்,கிராமவாசிகள் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story