விவசாயி மீது டிராக்டர் ஏற்றி கொன்ற முதியவர் கைது

விவசாயி மீது டிராக்டர் ஏற்றி கொன்ற முதியவர் கைது

முதியவர் கைது 

கும்பகோணம் அருகே விவசாயி மீது டிராக்டரை ஏற்றி கொலை செய்த முதியவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கும்பகோணம் அருகே திருவிடை மருதூர் வட்டத்துக்குள்பட்ட பருத்திக்குடி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் சக்திவேல் (48). விவசாயி. இவரும், அதே பகுதியைச் சேர்ந்த சசிகலாவும் (40) சில ஆண்டுகளாகபழகி வந்ததாகக் கூறப்படுகிறது. சசிகலாவின் கணவர் ராமலிங்கம் 20 ஆண் டுகளுக்கு முன்பு காலமானார். இந்நிலையில், சக்திவேலும், சசிகலாவும் கடந்த வியாழன் மாலை அப்பகுதியிலுள்ள நியாய விலை கடையில் பொருள்களை வாங்கிவிட்டு, பேசியபடி சைக்கிளை தள்ளிக் கொண்டு சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் (76) ஓட்டி வந்த டிராக்டர் சக்திவேல் மற்றும் சசிகலா மீது மோதியது. இதனால், பலத்த காயமடைந்த இருவரும் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேல் உயிரிழந்தார். சசிகலா மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து திருவிடைமருதூர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து, இந்த விபத்து எப்படி நிகழ்ந்தது என விசாரணை நடத்தினர். இதில், சில ஆண்டுகளாக சசிகலா தன்னுடன் பழகுவதைத் தவிர்த்து வந்த நிலையில், சக்திவேலுடன் பேசிக் கொண்டு செல்வதை பார்த்த ராமலிங்கம் ஆத்திரமடைந்து, இருவர் மீதும் டிராக்டரை ஏற்றியது தெரிய வந்தது. இதையடுத்து, காவல் துறையினர் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து, ராமலிங்கத்தை கைது செய்தனர்.

Tags

Next Story