ஆடு மேய்க்க சென்ற முதியவர் ஏரி நீரில் மூழ்கி பலி !

ஆடு மேய்க்க சென்ற முதியவர் ஏரி நீரில் மூழ்கி பலி !

பலி

திருச்சி அருகே பெருவளநல்லூர் ஊராட்சியில் உள்ள கீழ்ஏரியில் தண்ணீரில் இறங்கி ஏரியை கடக்க முயன்ற முதியவர் நீரில் மூழ்கி மாயமானார். லால்குடி தீயணைப்பு வீரர்கள் நீரில் மூழ்கி மாயமான முதியவரை சடலமாக மீட்டனர்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெருவளநல்லூர் ஊராட்சியில் உள்ள கொற்றாங்குளம் தெருவை சேர்ந்தவர் 65 வயதான மருதைமுத்து. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.பிள்ளைகள் இருவருக்கும் திருமணமாகி கணவர்களுடன் வசித்து வருகின்றனர்.

மருதை முத்து ஆடு மாடுகளை சொந்தமாக வளர்த்து வருகிறார். இவரது ஆடு,மாடுகளை அப்பகுதியில் உள்ள தரிசு நிலங்களில் மேய்த்து வருவது வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் ஆடு மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றுள்ளார்.

அப்போது மதியம் 2 மணிக்கு மேல் அங்குள்ள ஏரியை மருதைமுத்து கடக்க முயன்றுள்ளார். ஏரியில் உள்ள மண் அதிகளவில் அள்ளியதால் ஆழமாகவும் தண்ணீர் அதிகமாகவும் இருந்துள்ளது. ஏரி தண்ணீரில் இறங்கிய மருதைமுத்து எதிர்பாராதமாக நீரில் மூழ்கி மாயமானார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் லால்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்த லால்குடி தீயணைப்பு சிறப்பு நிலைய அலுவலர்கள் பிரபு, இளங்கோ தலைமையில் வீரர்கள் அசோக்,சுரேஷ், மணிகண்டன், விஜய் அமிர்தராஜ்,மனோஜ் குமார், பிரபு, சாகுல் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று நீரில் மூழ்கி மாயமான முதியவர் மருதமுத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

ஏரியில் தண்ணீர் அதிகமாக இருந்ததாலும், ஆழமாக இருந்ததாலும் முதியவர் உடல் கிடைக்கவில்லை. இரவு நேரமானதால் தேடும் பணியை நிறுத்திவிட்டு சென்றுவிட்டனர். இந்நிலையில் இன்று காலை மீண்டும் தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். அப்போது ஏரியில் மூழ்கிய முதியவர் மருதைமுத்துவை சடலமாக மீட்டனர்.

பின்னர் அவரது உடலை பெருவளநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் லால்குடி போலீசாரிடம் தீயணைப்பு வீரர்கள் ஒப்படைத்தனர். உடலை கைப்பற்றிய லால்குடி போலீசார் உடற்கூறு ஆய்விற்க்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து லால்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story