குரு மகாலிங்கேஸ்வரருக்கு அன்னாபிஷேகம்

அன்னாப்பிஷேகம்
தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரில் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் ஸ்ரீசித்தர் பீடம் அமைந்துள்ளது. இக்கோயிலில் தென்தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத தனிச்சிறப்பாக ''சிவபெருமான்'' குரு மகாலிங்கேஸ்வரராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஜப்பசி மாத பவுர்ணமி நாளில் குரு மகாலிங்கேஸ்வரரை அன்னாபிஷேகம் செய்து வணங்கினால் வறட்சி நீங்கும்.
பசுமைவளம் செழித்து பஞ்சம் பறந்தோடும், வாழ்வில் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும் என்பது ஐதீகமாகும். இதன்படி ஜப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று(28.10.2023) குரு மகாலிங்கேஸ்வரரான சிவபெருமானுக்கும், நந்திக்கும் பால், தயிர், பன்னீர், புஷ்பம், இளநீர் மற்றும் அன்னத்திலான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து குருமகாலிங்கேஸ்வரர் அன்னாபிஷேகத்துடன் கூடிய சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்க அன்னாபிஷேக வழிபாடுகள் அனைத்தும் ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் ''சாக்தஸ்ரீ'' சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது.
தொடர்ந்து, பருவமழை நன்குபெய்து விவசாயம் செழிக்கவேண்டியும், பக்தர்கள் வாழ்வில் செல்வங்கள் பெருகிடவும் வேண்டி ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி, மஹா காலபைரவர், ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு யாகம் மற்றும் மஞ்சள், சந்தனம், இளநீர், பால் உள்ளிட்ட 16வகையான அபிஷேக வழிபாடுகளும், தீபாரதனையும் மிக சிறப்பாக நடைபெற்றது.
அன்னாபிஷேகத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னாபிஷேக வழிபாடுகளுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் ''சாக்தஸ்ரீ'' சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில், ஸ்ரீசித்தர் பீடத்தினர், மகளிர் அணியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
