சேலத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவர்கள்
சேலம் மாநகர காவல்துறை சார்பில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மற்றும் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இணைந்து சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி சூரமங்கலம் பகுதியில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
இதில், மாநகர வடக்கு சரக போலீஸ் துணை கமிஷனர் பிருந்தா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியசைத்து விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலத்தில், கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார்,
சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் போதைப்பொருளுக்கு எதிராகவும், அதை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறும் சென்றனர். ஏ.வி.ஆர். ரவுண்டானா பகுதியில் இருந்து தொடங்கிய ஊர்வலம் சூரமங்கலம் ரெயில் நிலையம் அருகே நிறைவடைந்தது.
இந்த ஊர்வலத்தில், போலீஸ் துணை சூப்பிரண்டு லட்சுமணன், இன்ஸ்பெக்டர்கள் பாபுசுரேஷ்குமார், சுபாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.