அரளிப்பூ விளைச்சல் அமோகம்: விலை குறைவால் கவலை
அரளி பூ
சேந்தமங்கலம் வட்டாரத்தில் அரளி பூக்களின் விலை கிலோ ₹70ஆக குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சேந்தமங்கலம் வட்டாரம் கொல்லிமலை அடிவாரம் காரவள்ளி, நடுக்கோம்பை, ராமநாதபுரம் புதூர், வெண்டாங்கி, சக்திநகர் உள்ளிட்ட பகுதிகளில்,
விவசாயிகள் தங்களது தோட்டத்தில் அரளி சாகுபடி செய்துள்ளனர். இங்கு விளையும் அரளி பூக்களை விவசாயிகள் பறித்து சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பூ மார்க்கெட்டில் நடைபெறும் ஏலத்திற்கு அனுப்பி வைக்கின்றனர். கடந்த மாதம் கடும் வெயிலால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு, பூக்களின் வரத்து குறைந்து போனது.
இதனால் அரளி பூவின் விலை கிலோ ₹250க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது நல்ல மழை பெய்து பூக்களின் விளைச்சல் அமோகமாக இருப்பதால் விலை குறைய தொடங்கியுள்ளது. நாமக்கல், ஈரோடு, சேலம், கரூர் மார்க்கெட்டில் அரளிப்பூ கிலோ ₹70க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.