முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி தஞ்சை வருகை 

முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி தஞ்சை வருகை 
அலங்கார ஊர்தியில் மக்கள் பிரதிநிதிகள்

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு "முத்தமிழ்த்தேர்" என்ற அலங்கார ஊர்தி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வருகை தந்தது. இதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் (தஞ்சாவூர்), செ.ராமலிங்கம் (மயிலாடுதுறை), தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். இராமநாதன் ஆகியோர் முன்னிலையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

முத்தமிழ்த்தேரின் உள்ளே அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிலைக்கு அனைவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பார்வையிட்டனர். முத்தமிழறிஞர் கலைஞரின் பன்முகத் தன்மையினை விளக்கிடும் வகையில், முத்தமிழ்தேர், தஞ்சாவூர் மாநகராட்சியில் மன்னர் சரபோஜி கல்லூரி எதிரிலும், தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் அருகில் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டது.

இந்த வாகனம் "எழுத்தே எனது மூச்சு, எழுதுவதே எனது தினப்பழக்கம்" என்று முழங்கிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பயன்படுத்திய பேனா வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. மாணவ-மாணவியர்கள், மகளிர் சுயஉதவி குழுவினர் முத்தமிழ்தேரை மலர்தூவி வரவேற்றனர். கலைஞரின் சிறப்புகளை விளக்கும் குறும்படமும் தொடர்ந்து திரையிடும் வகையில் ஒளித்திரையும் அமைக்கப்பட்டுள்ளது. வாகனத்தின் உள்ளே, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கோபாலபுர இல்ல உள்அமைப்பு தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அஞ்சுகம் அம்மாள் அவர்களின் உருவச்சிலையும்,

அதன் அருகில் முத்தமிழறிஞர் கலைஞர் இருக்கையில் அமர்ந்திருப்பது போன்ற உருவச்சிலையும், அவர் பயன்படுத்திய நூலகத்தின் மாதிரி வடிவமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் அருகில் நின்று பொதுமக்கள் சுயபடம் எடுத்துக்கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், முத்தமிழறிஞர் கலைஞர் எழுத்துக்களுக்கு வடிவம் கொடுக்கும் அவரது படைப்புகளும், அவரது பன்முகத் தோற்றத்தினை விளக்கும் ஒலி, ஒளி அமைப்பும் உருவாக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கலைஞரின் எழுத்துகளால் உயிர்ப்பெற்ற கவிதை, கட்டுரை, புதினங்கள், காப்பியங்கள் போன்றவற்றை கைப்பேசி வாயிலாக இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து

கொள்ளும் வகையில் க்யூஆர் கோட்ஸ்கேன் மூலம் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாநகராட்சி துணை மேயர்கள் மரு.அஞ்சுகம் பூபதி (தஞ்சாவூர்) சுப.தமிழழகன் (கும்பகோணம்), மாநகராட்சி ஆணையாளர் மகேஷ்வரி, மாவட்ட சமூக நல அலுவலர் த.அனுராப்பூ நடராஜமணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் 2000க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள், ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

Tags

Next Story