மானாமதுரையில் ஜீவ ராசிகளுக்கு படியளக்கும் நிகழ்ச்சி - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

மானாமதுரையில் ஜீவ ராசிகளுக்கு படியளக்கும் நிகழ்ச்சி - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
ஜீவ ராசிகளுக்கு படியளக்கும் விழா
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் ஆலயத்தில் நடைபெற்ற அஷ்டமி சப்பர ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் ஆலயத்தில் கைலாய வாத்யம் முழங்க நடந்த அஷ்டமி சப்பர ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மன், சுவாமி தேர்கள் மீது அரிசியை தூவியபடி வலம் வந்தனர். அஷ்டமி சப்பர ஊர்வலம் என்பது உலகை காக்கும் சிவபெருமான் மார்கழி மாதத்தில் நடத்திய திருவிளையாடல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சிவபெருமான் கைலாயத்தில் இருந்தபடியே சகல ஜீவராசிகளுக்கும் உணவு வழங்குவார். ஒரு சமயம் பார்வதி தேவி ஒரு எறும்பை பிடித்து தனது கைகளுக்குள் வைத்து கொண்டு சிவனிடம் எல்லா ஜீவராசிகளுக்கும் உணவு வழங்கி விட்டீர்களா என கேட்க, சிவன் ஆமாம் என கூறியுள்ளார். அப்போது பார்வதி தனது கைகளுக்குள் எறும்பு உள்ளது.

அதற்கு படியளக்கவில்லை என கூற சிவன் கையை திறந்து பார் என சொன்னார். பார்வதி கையை திறந்து பார்த்த போது எறும்புக்கு அரிசி படைக்கப்பட்டிருந்தது. மார்கழி மாதத்தில் நடந்ததாக கூறப்படும் இந்த விழா ஒவ்வொரு சிவாலயத்திலும், அதிலும் கடல்சார் சிவாலயங்களில் சிறப்பாக நடைபெறும். இந்தாண்டு கைலாய வாத்தியம், சங்கு மற்றும் மேளதாளங்கள் முழங்க மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் ஆலயத்தில் நடைபெற்றது. அம்மனுக்கும், சோமநாதருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின் அலங்கரிக்கப்பட்ட தேரில் சோமநாதர் பிரியாவிடை தாயாருடன் ஆனந்தவல்லி அம்மனும் தனித்தனி தேரில் வீதியில் வலம் வந்தனர். பக்தர்கள் ஆனந்தவல்லி & சோமநாதர் வரும் வீதியெங்கும் அரிசியை தூவியபடியே வந்தனர். தேருக்கு பின்னால் தூவப்பட்ட அரிசியை பெண்கள் சேகரித்த வண்ணம் வந்தனர். வீதியில் தூவப்பட்ட அரிசியை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம் என்பதால் பலரும் ஆர்வத்துடன் சேகரித்த வண்ணம் சென்றனர்.

Tags

Next Story