அரசுப்பள்ளி தோட்டத்தை உதவி இயக்குனர் ஆய்வு

மல்லசமுத்திரம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் அமைத்துள்ள தோட்டத்தினை மல்லசமுத்திரம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜெயப்பிரபா பார்வையிட்டார். தொடர்ந்து அவர் கூறியதாவது. மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தில் அரசு கல்வி நிறுவனங்களில் தோட்டம் அமைத்தல் என்ற இலக்கின்கீழ், மல்லசமுத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தோட்டம் அமைக்க மல்லசமுத்திரம் தோட்டக்கலைத் துறையிலிருந்து மா, கொய்யா, நெல்லி, எலுமிச்சை, பப்பாளி, வாழை, தென்னை போன்ற மரச்செடிகள், உயர் ரக காய்கறி விதைகள் பல்வேறு மூலிகைச் செடிகள், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, மண்புழு உரம், தொழு உரம் போன்ற இயற்கை உரங்களும், மண்வெட்டி, கொத்து, பூவாளி கார்டன் ரேக் சிக்கேசர் போன்ற உபகரணங்களும் மானியத்தில் 3 மாதங்களுக்கு முன்பு வழங்கப்பட்டு தோட்டம் அமைத்து தரப்பட்டது.
அதன்படி, எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டத்தின் கீழ், சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பாக, 40க்கும் மேற்பட்ட பசுமைப்படை சார்ந்த மாணவர்கள் தோட்டத்தினை தினம்தோறும் பராமரித்து வந்தனர். இங்கு அறுவடை செய்யப்பட்ட காய்கறிகளை சத்துணவு மையத்திற்கு வழங்கி வருகின்றனர். மல்லசமுத்திரம் வட்டார தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் அவ்வப்போது சென்று தொழில்நுட்பங்களை எடுத்து கூறி வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.