வெயிலின் தாக்கம் - கால்நடைகளை பராமரிக்க அறிவுரை !

வெயிலின் தாக்கம் - கால்நடைகளை பராமரிக்க அறிவுரை !

கால்நடை

வெயிலின் தாக்கத்திலிருந்து கால்நடைகளை பராமரிக்க உதவி இயக்குனர் பக்கிரிசாமி அறிவுரை கூறினார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கோடைகாலம் தீவிரமடைந்துள்ள சூழலில், கால்நடைகளை வெப்ப அழற்சி நோயிலிருந்து பாதுகாக்க, பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை கால்நடை வளர்ப்போர் மேற்கொள்ள வேண்டும் என, கால்நடை பராமரிப்பு துறை, மதுராந்தகம் கோட்டத்தின் உதவி இயக்குனர் பக்கிரிசாமி கூறினார்.

இது குறித்து அவர் கூறியதாவது: கோடை காலத்தில் கால்நடைகளை அதிகம் தாக்கும் நோய் வெப்ப அழற்சி. இதனால், உடல் வெப்பநிலை, நாடித்துடிப்பு அதிகரித்து, கால்நடைகள் சோர்ந்தும், எச்சில் வடித்துக் கொண்டும் தீவனம் எடுக்க இயலாமல் காணப்படும்.

இதனால், பொருளாதார இழப்புகளான பால் உற்பத்தி குறைதல், இனப்பெருக்க திறன் குறைதல், சினைப்பிடிப்பு சதவீதம் குறைதல், சினைப்பிடிப்பு தாமதமாகுதல் போன்ற பாதிப்புகள் அறிகுறிகளாக தென்படும். சில மாடுகளில் இறப்பு ஏற்படக்கூடும். உள்நாட்டு மாடுகள் ஓரளவு இத்தகைய வெப்ப அழற்சியை தாங்கும். வெளிநாட்டின கலப்பின மாடுகள் எளிதில் பாதிக்கப்படும்.

இதை தடுக்க, கால்நடைகளுக்கு எந்நேரமும் குளிர்ந்த குடிநீர் குடிக்க வழி வகை செய்ய வேண்டும். மேய்ச்சலுக்கு அனுப்பப்படும் கால்நடைகளை, காலை 10: 00 மணி முதல்மதியம் 3: 00 மணி வரை வெயிலில் விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பசுந்தீவனம், தாது உப்பு கலவை போதிய அளவு கிடைக்கச் செய்ய வேண்டும். வேப்ப மரம் மற்றும் புங்க மரம் நிழலில் மாடுகளை கட்டி வைத்து பராமரிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

Tags

Next Story