கீழடியில் உள்ளூர் மக்கள் புறக்கணிப்பு

கீழடியில் உள்ளூர் மக்கள் புறக்கணிப்பு
கீழடி அருங்காட்சியகம்
கீழடி அருங்காட்சிய பணிக்கு உள்ளூர் மக்கள் புறக்கணிக்கப்பட்டதால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

சிவகங்கை மாவட்டம், கீழடியில் மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராம கிருஷ்ணன் தலைமையில் ஆற்றங்கரை நாகரீகத்தை கண்டறிய அகழாய்வு பணிகள் தொடங்கின. கீழடியில் அரசு இடம் ஏதும் இல்லாததால் விவசாயிகளின் தென்னந்தோப்புகளில் பணிகள் நடந்தன.

ஜனவரியில் தொடங்கி செப்டம்பர் வரை பணிகள் நடந்தன. அகழாய்வு பணிகளில் கொந்தகை, கீழடி பகுதி மக்களே ஈடுபடுத்தப்பட்டனர். தினமும் 60 பேர்களுக்கு வேலை வழங்கினர். தென்னந்தோப்பு உரிமையாளர்களை அகழாய்வு தளத்திற்கு காவல்காரர்களாக நியமித்து சம்பளமும் மத்திய தொல்லியல் துறை வழங்கியது. மூன்று கட்ட அகழாய்விற்கு பின் தமிழக தொல்லியல் துறை ஆறு கட்ட அகழாய்வை நடத்தி முடித்துள்ளது. தமிழக தொல்லியல் துறை சார்பில் நில உரிமையாளர்களுக்கு சலுகை ஏதும் வழங்கப்படவில்லை.

அகழாய்வு பணிகளில் கொந்தகை, கீழடி பகுதி ஆண்கள், பெண்கள் பங்கேற்றனர். இதில் அவர்களுக்கு தினமும் ரூ.350 முதல் 500 வரை வழங்கினர். கடந்தாண்டு மார்ச் 5ம் தேதி அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. உள்ளுர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் பொருட்டு தொகுப்பூதிய அடிப்படையில் 15 பேர் அருங்காட்சியக பராமரிப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஒரு ஆண்டு ஒப்பந்தபடி பணி வழங்கினர். பிப்ரவரி 28 உடன் இந்த ஒப்பந்தம் முடிகிறது. இதற்கான ஒப்பந்தமும் புதுப்பிக்கவில்லை. இனி வரும் காலங்களில் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்கப்படாது என தெரிவிப்பதால், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story