குமரியில் தடகள வீரர் பயிற்சி வழங்கிட விண்ணப்பிக்கலாம்
![குமரியில் தடகள வீரர் பயிற்சி வழங்கிட விண்ணப்பிக்கலாம் குமரியில் தடகள வீரர் பயிற்சி வழங்கிட விண்ணப்பிக்கலாம்](https://king24x7.com/h-upload/2024/06/30/567888-113800.webp)
மாவட்ட ஆட்சியர்
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் “விளையாடு இந்தியா” (Khelo India) திட்ட நிதியுதவியில் துவக்க நிலை தடகள பயிற்சிக்கான“SDAT- விளையாடு இந்தியா மாவட்ட மையம்” கன்னியாகுமரி மாவட்டம் அறிஞர் அண்ணா விளையாட்டரங்கத்தில் செயல்பட்டு வருகிறது.
இம்மையத்தில் 30-100 விளையாட்டுவீரர் / வீராங்கனைகள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு தினசரி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மையத்தில் பயிற்சியாளராக பயிற்சி வழங்கிட, தேசிய அளவில் சாதனை படைத்த 40 வயதுக்குட்பட்ட தடகள வீரர் / வீராங்கனை ஒருவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.
விண்ணப்பதாரர் குறைந்தது ஐந்து ஆண்டுகளாகவும், தற்போதும் கன்னியாகுமரி மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். சர்வதேச போட்டிகள் அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ அல்லது அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ,
சர்வதேசப் போட்டிகள் மற்றும் சீனியர் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டவராகவோ இருத்தல் வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சியாளருக்கு ரூ. 25,000/- ஊதியமாக மாதம் ஒன்றிற்கு வழங்கப்படும். இது நிரந்தரப்பணி அல்ல. முற்றிலும் தற்காலிகமானதாகும். இதன் அடிப்படையில் வேலைவாய்ப்பு சலுகைளோ நிரந்தரப் பணியோ கோர இயலாது.
இதற்குரிய விண்ணப்பத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், அண்ணா விளையாட்டரங்கம், நாகர்கோவிலில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு அலுவலத்தில் 01.07.2024 முதல் 15.07.2024 மாலை 5 மணிவரை பெற்றுக்கொள்ளலாம்.
பிற வழிகளில் வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்கப்படமாட்டாது, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டரங்கத்தில் நடைபெறும். உடற்தகுதி, விளையாட்டுத்திறன், பெற்ற பதக்கங்கள், பயிற்சி வழங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெறும்.
தேர்வு தேதி மற்றும் விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் இவ்வாறு தெரிவித்துள்ளார்.