வெள்ளைக்கவுண்டன்புதூரில் மதுபோதையில் கொலை முயற்சி: 3பேர் கைது

ஊத்துக்குளி, வெள்ளைக்கவுண்டன்புதூர் பகுதியில் மது போதையில் கொலை முயற்சியில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் சிறை வைக்கப்பட்டனர்.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகாவிற்கு உட்பட்ட வெள்ளை கவுண்டன்புதூர் பகுதியில் முத்துக்குமார் (39) என்பவர் குடும்பத்துடன் வசித்து தனியார் கம்பெனியின் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார்.

கடந்த மே மாதம் 2ஆம் தேதி இரவு செட்டிபாளையம் மதுபான கடைக்கு அருகே நண்பர்களுடன் மது அருந்தி கொண்டுள்ளார். அப்போது அவரது அருகே மது அருந்திக் கொண்டிருந்தவர்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் 3 பேர் முத்துக்குமாரை கத்தியால் குத்தி உள்ளனர்.

காயமடைந்த முத்துக்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இது தொடர்பாக முத்துக்குமாரின் மனைவி தாரணி அளித்த புகாரின் பேரில் ஊத்துக்குளி போலீசார் வெற்றிவேல் (23), சதாசிவம் (22) மற்றும் தேவராஜ் (23)ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட 3 பேரையும் குண்டர் சட்டத்தில் தடுப்பு காவலில் அடைக்க மாவட்ட எஸ்பி அபிஷேக் குப்தாவின் பரிந்துரையை ஏற்று மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் சிறை வைக்கப்பட்டனர்.

Tags

Next Story