பக்ரீத் கொண்டாட்டம்; இஸ்லாமியர்கள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்து

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு திருச்சி சையது முர்துசா பள்ளி வளாகத்தில் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான ஈகைத் திருநாள் என்று அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை திருச்சியில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. திருச்சி என்எஸ்பி ரோட்டில் உள்ள ஹசன் பாக் மசூதி, பீரங்கி குளத்தெருவில் உள்ள அமீர் மசூதி, மார்க்கெட் அருகில் உள்ள பேகம் சாஹீபா மசூதி, டவுன் ஹால் எதிரில் உள்ள முகமதியா மசூதியில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. திருச்சி கண்டோன்மென்ட் ஈத்கா மைதானத்தில் ஆற்காடு அறக்கட்டளை சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் பேச்சாளர் அப்துல் ரகுமான் கலந்து கொண்ட சிறப்பு உரையாற்றினார்.

தொழுகைகளில் மாவட்ட தலைவர் குலாம் தஸ்தஹீர், ஊடக பொறுப்பாளர் ரஹ்மத்துல்லாஹ் மற்றும் ஏராளமான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர். திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள சையது முர்துஷா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். இந்த சிறப்பு தொழுகைக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மேற்கு மாவட்ட தலைவர் கவுன்சிலர் பைஸ் அகமது, திருச்சி கிழக்கு மாவட்ட தலைவர் முகமது ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.தொழுகை முடிந்ததும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி பக்ரீத் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

Tags

Next Story