பண்ருட்டி எம்எல்ஏ பக்ரீத் வாழ்த்து

பண்ருட்டி எம்எல்ஏ பக்ரீத் வாழ்த்து

பண்ருட்டி எம்எல்ஏ வேல்முருகன் பக்ரீத் வாழ்த்து தெரிவித்தார்.


பண்ருட்டி எம்எல்ஏ வேல்முருகன் பக்ரீத் வாழ்த்து தெரிவித்தார்.

உலகம் தழுவிய அளவில் இசுலாமியப் பெருங்குடி மக்களால் போற்றப்படும் பெருநாளான தியாகத் திருநாளாம் பக்ரீத் நாளில் இசுலாமியர்கள் அனைவருக்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மானுடத்தை மேம்படுத்த அன்பையும், அமைதியையும், சமாதானத்தையும், சமத்துவத்தையும் உலகுக்குப் போதித்த பெருமானார் முகமது நபி அவர்களின் வருகைக்கு முன்பே போற்றப்பட்ட பெருநாள்தான் பக்ரீத் பெருநாளாகும்.

தன் வாழ்வில் நேர்ந்த சோதனைகளை எல்லாம் நெஞ்சுரத்தோடு எதிர்கொண்ட இப்ராகிம் நபி அவர்கள், ஏற்றுக்கொண்ட கொள்கைகளுக்காக தன் மகன் இஸ்மாயில் நபி அவர்களையே பலியிடத் துணிந்தபோது, இறைவன் அதனைத் தடுத்து மகனுக்குப் பதிலாக ஆட்டைப் பலியிட ஆணையிட்டதை நினைவுகூரும் வகையில், இசுலாமியர்கள் இந்த பக்ரீத் பெருநாளை குர்பானி கொடுத்துக் கொண்டாடுகின்றனர். இறைவனின் சோதனைகளைத் தாங்கும் நெஞ்சுறுதியும், தன் மகனையே தியாகம் செய்ய முன்வந்த தியாக உணர்வும் இப்ராகிம் நபி அவர்களிடத்தில் மேலோங்கியிருந்ததை முகமது நபி உட்பட இசுலாமியப் பேரினம் நினைவுகூர்ந்து போற்றி வருகிறது என்பது பக்ரீத் நாளின் மகிமையும் பெருமையும் ஆகும்.

அத்தகைய போற்றுதலுக்குரிய தியாகத் இத்திருநாளில், சாதி, மத வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் வாழ நாம் அனைவரும் உறுதியேற்போம். இந்த புனித நாளில், பசித்தவர்களுக்கு உணவும், துன்பப்படுபவர்களுக்கு உதவியும், எளியவர்களிடம் கருணை காட்ட வேண்டும் என்ற நபிகள் நாயகத்தின் போதனைகளை மக்கள் அனைவரும் மனதில் நிறுத்தி வாழ்ந்தால், உலகில் நிச்சயம் அமைதி நிலவும். வளம் பெருகும். இசுலாமியப் பெருமக்கள் மகிழ்வோடு கொண்டாடும் இந்த பக்ரீத் திருநாளில், உலகெங்கும் அன்பு, அமைதி, சமாதானம், மனிதநேயம் மற்றும் மத நல்லிணக்கம் மலரட்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tags

Next Story