நின்று கொண்டிருந்த லாரியில் மோதிய பைக் - வாலிபர் பலி

நின்று கொண்டிருந்த லாரியில் மோதிய பைக் - வாலிபர் பலி

சாலை விபத்து 

ஓட்டப்பிடாரம் அருகே சாலை ஓரத்தில் பழுதாகி நின்றிருந்த லாரியின் பின்பகுதியில் பைக்  மோதிய விபத்தில், வாலிபர் பலியானார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடராம் அருகே உள்ள வடக்கு பரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த மகன் பாலமுருகன் (22). லாரி டிரைவர். இவரது நண்பர் இந்திரா நகரை சேர்ந்த ஆண்டன் மகன் ஆஷிக் (21). இருவரும் நேற்று மாலையில் மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடி சென்றனர். பின்னர் தூத்துக்குடியில் இருந்து குறுக்குசாலை வழியாக மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை பாலமுருகன் ஓட்டி சென்றார்.

தூத்துக்குடி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மேலஅரசடி விலக்கு அருகே சென்றபோது, லாரி ஒன்று பழுதாகி சாலைஓரத்தில் நின்றுள்ளது. அப்போது, எதிர்பாராதநிலையில், அந்த லாரியின் பின்பக்கத்தில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பாலமுருகன் உடல் நசுங்கி ரத்தவெள்ளத்தில் அதே இடத்தில் பரிதாபமாக உயிர் இழந்தார். ஆஷிக் பலத்த காயங்களுடன் சாலையில் கிடந்தார். அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று, அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்விபத்து குறித்து தகவல் அறிந்த புதியம்புத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பாலமுருகன் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story