பூந்தமல்லி அருகே பைக்குகள் மோதல்: பாட்டி, பேத்தி பலி

பூந்தமல்லி அருகே பைக்குகள் மோதல்: பாட்டி, பேத்தி பலி

பலியானவர்கள்

பூந்தமல்லி அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் பாட்டி, பேத்தி பலியாகினர்.

பூந்தமல்லி அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் பாட்டி மற்றும் ஒன்றை வயது பேத்தி பலியாகினர். ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்தவர் ரேவதி (25). இவருக்கு நிகாஸ்ரீ என்ற ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்து தனது தாயாரான அன்பரசி(49), என்பவருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நிகாஸ்ரீக்கு உடல்நிலை சரியில்லாததால் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்ல முடிவு செய்தனர். அன்பரசி தனது பேத்தியான நிகாஸ்ரீயை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்னையை நோக்கி நேற்று மாலை வந்துள்ளனர்.

இவர்களது உறவினரான தண்டபாணி என்பவர் இருசக்கர வாகனத்தை ஓட்ட அன்பரசி தனது பேத்தியுடன் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தார். பூந்தமல்லி அடுத்த திருமழிசை சிப்காட் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் மோதியதில் நிலை தடுமாறி மூன்று பேரும் கீழே விழுந்தனர்.

இதில் அன்பரசி மற்றும் நிகாஸ்ரீ இருவரும் பலத்த காயமடைந்தனர். தண்டபாணிக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அன்பரசி மற்றும் நிகாஸ்ரீ இருவரையும் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் இன்று காலை உயிரிழந்தனர். இந்த சம்பவம் தகவல் அறிந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் உயிரிழந்த இருவரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதிய மற்றொரு இரு சக்கர வாகனத்தை ஒட்டி வந்தவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பாட்டியும் பேத்தியும் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story