ரூ. 1.5 கோடி கொள்ளை போனதாக பொய் புகாரளித்த பாஜக நிர்வாகி!

ரூ. 1.5 கோடி கொள்ளை போனதாக பொய் புகாரளித்த பாஜக நிர்வாகி!

ரூ. 1.5 கோடி கொள்ளை போனதாக பாஜக நிர்வாகி பொய் புகார் அளித்தநிலையில், விசாரணையில் ரூ. 18.5 லட்சம் மட்டுமே திருடப்பட்டது தெரியவந்துள்ளது.

ரூ. 1.5 கோடி கொள்ளை போனதாக பாஜக நிர்வாகி பொய் புகார் அளித்தநிலையில், விசாரணையில் ரூ. 18.5 லட்சம் மட்டுமே திருடப்பட்டது தெரியவந்துள்ளது.

கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த சொக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார்.பாஜக பிரமுகரான இவர் இதே பகுதியில் வாகனங்களை சுத்தம் செய்யும் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று காலை தனது தோட்டத்துக்கு சென்று விட்டு பிற்பகலில் மீண்டும் வீட்டுக்கு திரும்பியதாக சொல்லப்படுகிறது. அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்ட நிலையில் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்ட நிலையில் அதிலிருந்த பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து விஜயகுமார் தன் வீட்டில் வைத்திருந்த ஒன்றரை கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 9 சவரன் நகைகள் காணாமல் போனதாக அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி பாலாஜி தலைமையில் 10 தனிப் படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை கைப்பற்றி போலீசார் சோதித்த போது சந்தேகத்துக்கிடமான நபர் ஒருவர் விஜயகுமாரின் வீட்டுக்கு அருகே இருசக்கர வாகனத்தில் வந்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து கருமத்தம்பட்டி பகுதியில் பதுங்கி இருந்த அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்த போலீசார் அன்னூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அன்பரசன் என்பதும் கருமத்தம்பட்டி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.பாஜக பிரமுகர் விஜயகுமாரின் வீட்டில் பூட்டை உடைத்து 18 புள்ளி 5 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 9 சவரன் நகைகளை அன்பரசன் கொள்ளையடித்துச் சென்றதும் பல்வேறு மாவட்டங்களில் அன்பரசன் மீது ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது.

இதனை அடுத்து அவரிடம் இருந்த 18.5 லட்சம் ரொக்கம் மற்றும் ஒன்பது சவரன் நகைகளை பறிமுதல் செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.முன்னதாக பாஜக பிரமுகர் விஜயகுமாரை அழைத்து போலீசார் மீண்டும் விசாரணை நடத்தியதில் கொள்ளையர்களை விரைவாக பிடிப்பதற்காக போலீசுக்கு அழுத்தம் தரவே ஒன்றரை கோடி ரூபாய் காணாமல் போனதாக பொய்யான தகவலை தெரிவித்ததாக கூறி சமாளித்துள்ளார். இந்த வழக்கில் கொள்ளையன் 24 மணி நேரத்துக்குள்ளாக பிடிபட்ட நிலையில், அன்னூர் காவல் நிலையத்துக்கு நேரில் வந்த கோவை மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் தனிப்படை போலீசாருக்கு பாராட்டு தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இது போன்ற கொள்ளை சம்பவங்களில் உண்மையான தகவலை கூறினால் மட்டுமே போலீசார் விசாரணையை துரிதப்படுத்த முடியும் எனவும் தவறான தகவல்களை கூறினால் அது விசாரணையை பாதிக்கும் எனவும் பொதுமக்கள் இது போன்ற குற்ற வழக்குகளில் பொய்யான தகவல்களை கொடுக்க வேண்டாம் எனவும் தெரிவித்தார்.மேலும் இந்த கொலை சம்பவத்தில் பொய்யான தகவல்களை கூறி போலீசாரை அலைக்கழித்த பாஜக பிரமுகர் விஜயகுமார் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்ய உள்ளதாகவு எஸ்.பி பத்ரிநாராயணன் தெரிவித்தார்.

Tags

Next Story