பிரதமர் குறித்து அவதூறு - திமுக பிரமுகரை கண்டித்து பாஜக போராட்டம்

பிரதமர் குறித்து அவதூறு - திமுக பிரமுகரை கண்டித்து பாஜக போராட்டம்

போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 

பிரதமர் மோடி மற்றும் இந்து கடவுளை இழிவு படுத்தும் விதமாக சித்தரித்த படத்தினை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த திமுக பிரமுகரை கண்டித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் திமுக இளைஞர் அணி அமைப்பாளராக யேசு ராஜாகுட்டி என்பவர் பதவி வகித்து வருகிறார், மேலும் இவர் பேருந்து நிலையத்தில் டிராவல்ஸ் நடத்துவதுடன் தினசரி தனியார் சென்னை பேருந்தினையும் இயக்கி வருகிறார், இந்நிலையில் இன்று மோடி மற்றும் இந்து கடவுளை இழிவு படுத்தும் விதமாக சித்தரித்த படத்தினை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார், இதன் காரணமாக இவருக்கும் பிஜேபி பிரமுகருக்கும் சமூக வலைதளத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து திமுக பிரமுகர் இயக்கும் சென்னை செல்லும் தினசரி தனியார் பேருந்து முன் பிஜேபி மற்றும் இந்து அமைப்பினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்த திமுக பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என முற்றுகையில் ஈடுபட்டனர்,

தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் பிஜேபி கட்சியினரிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்,சமதான பேச்சு வார்த்தை உடன்பாடு ஏற்படாத‌தால் பிஜேபியின‌ர் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பினர், இந்நிலையில் திமுக கட்சி நகர செயலாளர், நகர்மன்ற தலைவர்,துணை தலைவர் மீண்டும் பிஜேபி க‌ட்சியின‌ரிட‌ம் சமதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் பிஜேபி க‌ட்சியின‌ர் மற்றும் இந்து அமைப்பின‌ர் பேருந்தின் முன் அம‌ர்ந்து தர்ணாவில் ஈடுப‌ட்ட‌ன‌ர், இதனை தொடர்ந்து காவல் துறையினர் பிஜேபி கட்சியினரை குண்டு கட்டாக தூக்கி த‌ர்ணாவை க‌லைத்த‌ன‌ர், இதனையடுத்து பிஜேபி கட்சியினர் புகார் மனு அளித்தால் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என காவ‌ல்துறையின‌ர் கூறிய பிறகு, பிஜேபி கட்சியினர் பேருந்து நிலையம் முதல் அண்ணாசாலை வழியாக காவல் நிலையம் வ‌ரை கோஷங்கள் எழுப்பி ஊர்வலமாக சென்று பிஜேபி கட்சியினர் காவ‌ல்நிலைய‌த்தில் புகார் மனு அளித்தனர்,.

காவல் ஆய்வாளர் பாஸ்கர் பிஜேபி கட்சியினரிடம் புகார் மனு ரசீது வழங்கப்படும் என்றும் தேர்தல் நேரத்தில் பொதுமக்கள் ஒன்றாக கூடுவது தவறு என்றும் தேர்தல் ஆணையத்தில் இது குறித்து தகவல் தெரிவித்து உள்ளதாகவும், தேர்தல் ஆணையம் தெரிவிக்கும் குற்ற வழக்குகள் கீழ் திமுக பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்யபடும் எனவும் தெரிவித்தார்,மேலும் அனைவரும் கலைந்து செல்ல அறிவுறுத்திய பிறகு அனைவரும் கலைந்து சென்றனர், மேலும் இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்தால் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என பிஜேபியின‌ரும், இந்து அமைப்பின‌ரும் காவ‌ல்நிலைய‌த்தில் தெரிவித்து சென்றனர்,இதனால் பேருந்து நிலையம், அண்ணாசாலை ப‌குதிக‌ள் பரபரப்பாக காணப்பட்டது.

Tags

Next Story