சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து கிராம மக்கள் கருப்பு கொடி போராட்டம்

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து கிராம மக்கள் கருப்பு கொடி போராட்டம்

போராட்டம் 

திருமருகல் அருகே பனங்குடியில் சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து விவசாயிகள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் தெரிவித்தனர்.

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சி.பி.சி.எல் எண்ணை ஆலை நிறுவனம் இயங்கி வருகிறது. ஆலை விரிவாகத்திற்காக ரூ.31,500 கோடி ஒதுக்கப்பட்டு, 2019 ஆம் ஆண்டு 620 ஏக்கர் என பனங்குடியை சுற்றி 1300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு அங்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. பனங்குடியில் ஜனவரி மாதம் 29-ஆம் தேதி வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் சிபிசிஎல் அதிகாரிகள் நிலம் அளவிடும் பணி மேற்கொண்டபோது நிலத்திற்கான இழப்பீட்டுத் தொகையை வழங்காமல் நிலம் அளவீடு செய்யக்கூடாது என அளவிடும் பணியை விவசாயிகள் தடுத்து நிறுத்தினர்.

பின்னர் பாசன வாய்க்காலில் இறங்கி போராட்டம் என பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில் விவசாயிகள்,நில உரிமை தாரர்கள்,சாகுபடிதாரர்கள்,கூலித் தொழிலாளர்கள் அவர்களது வீட்டில் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகள் வைத்தும் கருப்புக்கொடி ஏற்றியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சி.பி.சி.எல் நிறுவனம் விரிவாக்க பணிக்காக நிலம் கையகப்படுத்தியதற்கு 2013 இழப்பீடு சட்டத்தின்படி மறுவாழ்வு மற்றும் மீள் குடியேற்றம் சட்டத்தின்படி சாகுபடி தாரர்கள்,கூலி தொழிலாளர்கள் அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்,

நில உரிமைதாரர்களுக்கு சிலருக்கு நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்காமல் உள்ளது,விவசாயிகளின் நியாயமான சட்டத்திற்கு உட்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிய பிறகு சி.பி.சி.எல் நிறுவனம் பணிகளை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் புறக்கணிக்கப் போவதாக கையில் கருப்பு கொடியுடன் அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.இதில் பனங்குடி,நரிமணம்,கோபுராஜபுரம் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு உரிய தீர்வு எட்டப்படவில்லை என்றால் தேர்தலை புறக்கணித்து வாக்களிக்கப் போவதில்லை என தெரிவித்தனர்.

Tags

Next Story