நாகர்கோவிலில் புத்தக திருவிழா துவக்கம்

நாகர்கோவிலில் புத்தக திருவிழா துவக்கம்
புத்தக கண்காட்சியில் மாணவியை பாராட்டிய குமரி மாவட்ட கலெக்டர்
நாகர்கோவிலில் நேற்று துவங்கிய புத்தக திருவிழா கண்காட்சி வரும் 27ம் தேதி வரை நடக்கிறது.

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் புத்தகத் திருவிழா கண்காட்சி நாகர்கோவில் எஸ் எல் பி பள்ளி மைதானத்தில் நேற்று மாலை துவங்கியது. மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் தலைமை வகித்து விழாவை துவக்கி வைத்தார். நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் முன்னிலை வகித்தார். இந்த புத்தக விழா வருகின்ற 27.02.2024 வரை நடைபெற உள்ளது.

புத்தக கண்காட்சியில் பொது அறிவு, போட்டித்தேர்வுகளை எதிர்கொள்வது, வரலாற்று புத்தகங்கள், இலக்கியங்கள், கவிதை, நாவல்கள் உள்ளிட்ட பல்வேறு எழுத்தாளர்களின் படைப்புகள் சுமார் 100-க்கும் மேற்பட்ட அரங்குகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மேயர் ஆகியோர் பத்தக கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த 100-க்கும் அதிகமான புத்தக கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்கள். அதனைத்தொடர்ந்து ஆதார்ஸ் வித்யா பள்ளியில் 7-வது படிக்கும் மாணவி எஸ்.ஹெச்.ஹன்சி My Little Lively in Lovely Life என்ற நூலை எழுதி வெளியிட்டமைக்காக அம்மாணவியை பாராட்டியதோடு, மாநில அளவில் நடைபெற்ற கலா உற்சவா போட்டியில் வெற்றி பெற்ற அபிதா சந்திரசேகர் என்பவரும் பாராட்டப்பட்டார்.

இக்கண்காட்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story