சுங்கான்கடையில் தொழிலாளிக்கு பாட்டில் குத்து

சுங்கான்கடையில் தொழிலாளிக்கு பாட்டில் குத்து
வழக்குபதிவு
கன்னியாகுமரி மாவட்டம், சுங்கான்கடையில் தொழிலாளியை குத்தியவர்கள் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள சுங்கான்கடை பகுதி பனவிளையை சேர்ந்தவர் நீலகண்டன் (33) தச்சு தொழிலாளி. இவர் சம்பவ தினம் இரவு சுங்கான் கடையில் உள்ள ஒரு கடையில் நூடுல்ஸ் வாங்க சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த அதே பகுதியை சேர்ந்த விஜயன், பிரவீன் ஆகியோர் நீலகண்டனை பார்த்து கிண்டலடித்து பேசி உள்ளனர். இதை நீலகண்டன் தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜயன் அருகில் கிடந்த பாட்டிலால் நீலகண்டன் தலையில் தாக்கியுள்ளார்.

அத்துடன் பாட்டிலை உடைத்து அவரை குத்தியுள்ளார். இதில் காயமடைந்த நீலகண்டன் சத்தம் போட்டார். அதை கேட்டு அங்கு வந்த கண்ணன் என்பவர் அவர்களை தடுத்தார். அவரையும் தாக்கி கொலை மிரட்டல் கொடுத்துவிட்டு இருவரும் தப்பி சென்றனர். இதில் காயம் அடைந்த நீலகண்டன், கண்ணன் இருவரும் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்த புகாரின் பேரில் விஜயன், பிரவீன் ஆகியோர் மீது இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story