மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

அரசு மரியாதை

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

தஞ்சாவூர் அருகே வல்லத்தைச் சேர்ந்த 45 வயதான ஆண் சாலை விபத்தில் காயமடைந்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த இவர் செவ்வாய்க்கிழமை மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து இவரது உடல் உறுப்புகளைத் தானமாக கொடுக்க உறவினர்கள் முடிவு செய்தனர். இதன்படி, மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தானமாக பெறப்பட்டது.

இதில் ஒரு சிறுநீரகம் மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மற்றொரு சிறுநீரகம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒருவருக்கு பொருத்தப்பட்டது. தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செய்யப்பட்ட 17 ஆவது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை இது. இதேபோல, தோல் மதுரையில் உள்ள மருத்துவமனைக்கும், கண்கள் தானமாக பெறப்பட்டு தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் உள்ள கண் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து மூளைச்சாவு அடைந்தவரின் உடலுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் செ.இலக்கியா, மருத்துவக்கல்லூரி முதல்வர் ஆர். பாலாஜிநாதன் உள்ளிட்டோர் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags

Next Story