செங்கல்பட்டு அருகே பைக்கில் சென்ற சகோதரர்கள் விபத்தில் பலி
கோப்பு படம்
செங்கல்பட்டு மாவட்டம்,மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன்கள் தாமோதரன், 52, ஜெகதீசன், 49. ரியல் எஸ்டேட் தொழில் செய்தனர். நேற்று காலை 8:00 மணிக்கு, சிற்றுண்டி வாங்க, ஸ்பிளென்டர் இருசக்கர வாகனத்தில், அருகில் உள்ள கடைக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, மாமல்லபுரத்திலிருந்து சென்னை நோக்கி, அதிவேகத்தில் சென்ற வேகன் ஆர் கார், கட்டுப்பாட்டை இழந்து, இருசக்கர வாகனத்தின் பின்புறம் மோதி, அவர்கள் இருவரும் துாக்கி வீசப்பட்டனர். இருசக்கர வாகனத்தை சற்று தொலைவு இழுத்துச் சென்ற கார், அங்கிருந்த சிற்றுண்டி தள்ளுவண்டி, இருசக்கர வாகனங்கள், மின் கம்பம் உள்ளிட்டவற்றில் மோதி, கவிழ்ந்து உருக்குலைந்தது. அப்பகுதியினர் சகோதரர்களை மீட்டு, கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களை பரிசோதித்த டாக்டர், தாமோதரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
ஜெகதீசனை, குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சேர்க்க பரிந்துரைத்து, அங்கு கொண்டு செல்லும் வழியிலேயே, அவரும் உயிரிழந்தார். காரை ஓட்டிய, முட்டுக்காடு தனியார் விடுதி அலுவலர் சீனிவாசராவ், 59, காரில் சிக்கிக் கொண்டார். மாமல்லபுரம் தீயணைப்பு வீரர்கள் வந்து அவரை மீட்டனர்.
அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. இவ்விபத்து குறித்து, தாமோதரன் மகன் வாசுதேவன் அளித்த புகாரின்படி, மாமல்லபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.