ஸ்டாலின் ஆட்சியில் கட்டப்பட்ட கட்டடங்கள் வரலாறு பேசும்

முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் கட்டப்பட்ட கட்டடங்கள் 100 ஆண்டுகள் கடந்தும், வரலாறு பேசும் என அமைச்சர் வேலு பேசினார்.

அரசு அலுவலர்களுக்கான புதிய குடியிருப்பு கட்டடங்களை அமைச்சர் எ.வ வேலு, எம்.பி ராசா, அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் திறந்து வைத்தனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலை கல்லூரி அருகே பொதுப்பணித்துறை சார்பில் அரசு அலுவலர்களுக்கான சுமார் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 50 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடத்தை தமிழ்நாடு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைதுறை மற்றும் சிறு துறை முகங்கள் அமைச்சர் எ.வ வேலு, சுற்றுலாத்துறை அமைச்சர், ராமசந்திரன் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ராசா ஆகியோர் திறந்து வைத்து, அரசு ஊழியர்களுக்கு, குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணையை வழங்கினர். அமைச்சர் எ.வ வேலு பேசுகையில்,

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பதவி ஏற்கும் போது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான் என்று அவர் தலைநிமிர்ந்த போது தான் தமிழ்நாடு தலை நிமிர்ந்து. ஆயக்கலைகள் 62 என்பார்கள் அதில் சமையல் கலை, மருத்துவ கலை, கட்டிடக்கலையும் அந்த ஆயக்கலைகளுள் ஒன்று, பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடங்கள் அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்து உள்ளது. சோழர், முகலாயர், பல்லவர், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கட்டடங்கள் 100 ஆண்டுகளையும் கடந்து நிமிர்ந்து நின்று இருப்பது போல் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி காலத்தில் பொது பணித்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நினைவிடம் உட்பட பல்வேறு துறை கட்டிடங்கள் 100 ஆண்டுகள் கடந்து வரலாறு பேசும். அரசுத் துறை இயங்குவதுதற்கு முக்கிய காரணமாக இருந்து வரும் அரசுத்துறை அலுவலர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் அரசாக ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்படுகிறது,

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா, ஊட்டி சட்டமன்ற உறுப்பினர் கணேசன் உட்பட அரசுத் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story