சண்டையில் கட்டையால் அடித்து தாக்கிய காட்சிகள் வைரல்
![சண்டையில் கட்டையால் அடித்து தாக்கிய காட்சிகள் வைரல் சண்டையில் கட்டையால் அடித்து தாக்கிய காட்சிகள் வைரல்](https://king24x7.com/h-upload/2024/05/27/527685-1000754778.webp)
தாக்கி கொள்ளும் நபர்கள்
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா, கடமலைக்குண்டு அருகே உள்ள கரட்டுப்பட்டி கிராமத்தில் பாலமுருகன் என்பவரின் வீட்டில் ஒத்திக்கு சசிக்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். வீட்டில் கழிவுநீர் செல்வதில் இரண்டு குடும்பத்திற்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று பாலமுருகன் மனைவி ஜெயலட்சுமி, சசிக்குமார் குடும்பத்தினரை ஜாடை பேசியதாக தெரிகிறது. அப்போது சசிக்குமார் வீட்டிற்கு மஞ்சுனூத்து கிராமத்தை சேர்ந்த உறவினர்கள் குமரேசன், அபிமன்யூ, விக்னேஷ், மனோஜ், மதன் ஆகியோர் வந்தனர். தனது உறவினரான சசிக்குமார் குடும்பத்தினருடன் அடிக்கடி சண்டையில் ஈடுபட்ட ஜெயலட்சுமி, அவருடைய அண்ணன் வாசககுமார், மாமா மாலியன் ஆகியோரை அசிங்கமாக பேசி, கம்பு, மண்வெட்டி பிடி, கட்டை, கம்பியை கொண்டு சரமாரியாக தாக்கத் தொடங்கினர்.
இந்த காட்சியை அப்பகுதியை சேர்ந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர். அந்த காட்சியில் ஜெயலட்சுமி, வாசககுமார், மாலியன் ஆகியோரை 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஜெயலட்சுமி கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஜெயலட்சுமி மற்றும் குடும்பத்தினரை தாக்கிய 5 பேரை கைது செய்தனர். மேலும் படுகாயம் அடைந்த ஜெயலட்சுமி, வாசககுமார், மாலியன் ஆகியோர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
குடும்பத்தினரை ஆயுதங்களால் தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் கடமலைக்குண்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.