தொழிலாளர் தினத்தில் விடுமுறை அளிக்காத 61நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு

தொழிலாளர் தினத்தில் விடுமுறை அளிக்காத 61நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு

பைல் படம் 

மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, தொழிலாளர்களுக்கு விடுமுறைஅளிக்காத 61 கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை அதிகாரிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

தொழிலாளர் துறை உதவி கமிஷனர் (அமலாக்கம்) திருநந்தன் உத்தரவின்பேரில், தொழிலாளர் துறை அதிகாரிகள், தேசிய விடுமுறை தினமான (மே 1) விடுமுறை அளிக்காத கடைகள் மற்றும் நிறுவனங்களில் ஆய்வு செய்தனர். அப்போது, தொழிலாளர்களுக்குக் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறதா அல்லது பணியாளர்கள் பணிபுரிந்தால் அவர்களுக்கு அன்றைய தினம் இரட்டிப்பு சம்பளமோ அல்லது 3 தினங்களுக்குள் ஒருநாள் மாற்று விடுப்போ வழங்கப்படுவதாக நிர்வாகம் தெரிவித்து அதற்குரிய படிவம் தொழிலாளர் உதவி ஆய்வாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்து முன் அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பது குறித்தும் சோதனை நடத்தினார்கள்.

நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் சங்ககிரி ஆகிய பகுதிகளில் கடைகள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் தொழிற் கூடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 28 கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 22 கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களிலும், 36 உணவு நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 32 உணவு நிறுவனங்களிலும், 10 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 7 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களிலும், என மொத்தம் 74 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 61 நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மே தினத்தன்று விடுமுறை அளிக்காமல் சட்டத்திற்கு புறம்பாக பணிக்கு அமர்த்தியது கண்டறியப்பட்டது. அந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தொழிலாளர் துறை உதவி கமிஷனர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story