செல்போன் கடை பூட்டை உடைத்து திருட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

செல்போன் கடை பூட்டை உடைத்து  திருட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

சிசிடிவி காட்சிகள் 

கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள டீச்சர்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் வேணுகோபால்(44).இவர் கடந்த 15 ஆண்டுகளாக அன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் செல்போன் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று காலை வழக்கம் போல் காரமடையில் இருந்து கடைக்கு சென்று பணிகளை முடித்து விட்டு இரவு கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.

மறுநாள் காலை வந்து பார்த்த போது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தவர் கடையின் உள்ளே சென்று பார்த்த போது அங்கு வைக்கப்பட்டிருந்த ஐந்திற்க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் ரொக்க பணம் ரூ.70 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து வேணுகோபால் அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உதவி ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.

மேலும் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தபோது நள்ளிரவு நேரத்தில் கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே வரும் மர்ம நபர்கள் இருவர் கடையில் இருந்த பொருட்களை சாவகாசமாக நோட்டமிட்டதுடன் 5க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் 70 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள அன்னூர் போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர். எப்போதும் பரபரப்பாக வாகன போக்குவரத்து நிறைந்து காணப்படும் மேட்டுப்பாளையம் சாலையில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story