மது போதையில் நண்பர்களுக்குள் மோதல்- ஓருவர் கொலை

மது போதையில் நண்பர்களுக்குள் மோதல்- ஓருவர் கொலை

கைது 

காஞ்சிபுரம் அடுத்த ஆரிய பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சூர்யா (26). அதே பகுதியில் உள்ள மெட்ரிக் பள்ளியில் வேன் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஐந்து வருடத்துக்கு முன்பு மாற்று சமுதாயத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் வீட்டுக்கு எதிர் வீட்டைச் சேர்ந்தவர் கார்த்தி (23). காஞ்சிபுரம் அடுத்த விநாயகபுரம் பகுதியில் கார்த்திக் சொந்தமாக வெல்டிங் கடை நடத்தி வருகிறார். இருவரும் அவ்வப்போது இரவு நேரங்களில் ஒன்றாக மது அருந்துவது வழக்கம். இந்த நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சூர்யாவிற்கு ஊர் திருவிழாவின் போது அதே பகுதியில் உள்ள சிலருக்கும் பிரச்சனை ஏற்பட்டதாகவும், இது தொடர்பாக கார்த்திகை சூர்யா அழைத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் கார்த்திக் அதில் தலையிடாமல் இருந்ததாகவும், இதனால் எரிச்சல் அடைந்த சூர்யா அவர் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டு இருவரும் பேசாமல் இருந்து வந்ததாகவும் இவர்களுக்கிடையே அவ்வப்போது வாக்குவாதங்கள் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு சூர்யா கார்த்திக்கை மது அருந்த அழைத்த நிலையில், சில நாட்களாக பேசாமல் இருந்த நண்பன் மது அருந்த அழைத்ததால், ஏதாவது வாக்குவாதம் மற்றும் பிரச்சனை ஏற்படும் என்று எண்ணிய கார்த்திக், கத்தியை எடுத்து தன்னுடைய வண்டியின் பின்புறம் மறைத்து வைத்துக் கொண்டு சென்றுள்ளார். ஆரிய பெரும்பாக்கம் வந்து சூர்யாவை தன்னுடைய வண்டியில் ஏற்றிக்கொண்டு அபிராமி நகர் பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் மது பாட்டில்கள் வாங்கிக்கொண்டு ஆரிய பெரும்பாக்கம் பகுதியில் உள்ள ஏரி கரைக்கு வந்து இருவரும் சேர்ந்து மது அருந்தியதாகவும் சொல்லப்படுகிறது. நண்பர்கள் இருவரும் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்த போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த கார்த்தி தனது இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மது போதையில் இருந்த சூர்யாவை உச்சந்தலை மற்றும் கழுத்தில் வெட்டி உள்ளார். எதிர்பாராத இந்த தாக்குதலால் நிலை குலைந்து போன சூர்யா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார். அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கார்த்திக் வண்டியை எடுத்துக்கொண்டு பாலு செட்டி சத்திரம் காவல் நிலையத்துக்கு வந்து, நண்பன் சூர்யாவை நானே வெட்டி கொன்று விட்டேன் என கூறி சரணடைந்துள்ளார். இந்தக் கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என கார்த்திக்கிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story