குழந்தையின் அருகே நாகம் - சுதாரித்த தாய் : மீட்ட தீயணைப்பு வீரர்கள்.

குழந்தையின் அருகே நாகம் - சுதாரித்த தாய் : மீட்ட தீயணைப்பு வீரர்கள்.

பதுங்கிய பாம்பை தேடும் தீயணைப்பு வீரர்கள்

லால்குடி அருகே செம்பழனியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஆறு மாத குழந்தையின் அருகில் ஊர்ந்து சென்ற 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பை லால்குடி தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே செம்பழனி கிராமத்தைச் சேர்ந்தவர் 35 வயதான பாலகிருஷ்ணன்.இவர் தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 6 மாத கைக்குழந்தை உட்பட இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று இரவு பாலகிருஷ்ணனின் மனைவி குழந்தைகளுடன் வீட்டின் தரையில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது 4 அடி நீளமுள்ள நல்லப்பாம்பு ஆறு மாத குழந்தையின் அருகில் ஊர்ந்து சென்றுள்ளது.

இதை கவனித்த பாலகிருஷ்ணன் மனைவி சுதாரித்து எழுந்துள்ளார். பின்னர் பாம்பை தேடிய போது அது வீட்டுக்குள் ஒரு பகுதிக்குள் பதுங்கிக் கொண்டது.இது குறித்து பாலகிருஷ்ணனின் மனைவி லால்குடி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்த லால்குடி தீயணைப்பு சிறப்பு நிலைய அலுவலர் பிரபு வீரர்கள் சசிகுமார், பிரபு, ராஜா, சாகுல் ஹமீது, விஜய் ஆகியோர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று சுமார் அரை மணி நேரம் போராடி வீட்டுக்குள் பதுங்கி இருந்த 4 அடி நீளமுள்ள நல்லப்பாம்பை உயிருடன் மீட்டனர்.

பின்னர் அப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் பாம்பை விடுவித்தனர்.பாம்பை உயிருடன் மீட்டதால் பாலகிருஷ்ணன் மற்றும் குடும்பத்தினர் நிம்மதி அடைந்தனர். குழந்தையின் தாய் சுதாரிக்காமல் இருந்திருந்தால் பாம்பு யாரேனும் கடித்து உயிர்ச்சேதம் ஏற்பட வாய்ப்பு இருந்திருக்கும். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story