வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆட்சியர் நேரில் ஆய்வு

சிவகாசி மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி, சிவகாசி மாநகராட்சி, பெரியார் காலனியில் 15-வது நிதிக்குழு மானியத்தின் தேசிய நகர்ப்புற சுகாதார பணியின் கீழ் ரூ.30 இலட்சம் மதிப்பில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம் கட்டப்பட்டு வருவதையும், கவிதா நகரில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.43 இலட்சம் மதிப்பில் குழந்தைகளுக்கான பூங்கா மற்றும் விளையாட்டுக்களம் அமைக்கப்பட்டு வருவதையும், விருதுநகர் - திருத்தங்கல் சாலையில் செயல்பட்டு வரும் நுண் உர செயலாக்க மையத்தில், சேரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பைகள் அனைத்தும் அதற்கான இயந்திரத்தில் அரவை செய்யப்பட்டு, தொட்டியில் காய வைத்து உரமாக மாற்றப்படும் பணிகள், ரப்பர், நெகிலி, மரக்கட்டை உள்ளிட்ட திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்யும் பணிகளையும், சிறப்பு நிதியின் கீழ் ரூ.10 கோடி மதிப்பில் சிவகாசி மாநகராட்சி புதிய அலுவலகம் கட்டப்பட்டு வருவதையும், அண்ணாமலை நாடார் உண்ணாமலை அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் ரூ. 56 இலட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார். மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.

Tags

Next Story