கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைவரும் ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் - மாவட்ட ஆட்சியர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைவரும் ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் - மாவட்ட ஆட்சியர்

மாவட்ட ஆட்சியர் 

கன்னியாகுமரி மாவட்டம்,1104 வாக்கு சாவடி மையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நாளை (19.04.2024) நடைபெறுவதையொட்டி அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் அலுவலத்திலிருந்து நாகர்கோவில் சட்டமன்றத்திற்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு தேர்தல் பயன்பாட்டிற்கு தேவையான பொருட்கள் அனுப்பி வைக்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், இன்று (18.04.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் ,

கன்னியாகுமரி மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 15,55,096 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 7,76,127 பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 7,78,834 மூன்றாம் பாலினம் வாக்காளர்களின் எண்ணிக்கை 135 என மொத்தம் 15,55,096 வாக்காளர்கள் உள்ளார்கள்.

மேலும் கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவு நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் 13 வகையான ஆவணங்களில் ஏதாவது ஒன்றினை வாக்குப்பதிவு மையங்களுக்கு கொண்டு சென்று வாக்களிக்கலாம்.

நமது மாவட்டத்தில் 1698 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டள்ளது. இந்த வாக்குச்சாவடி மையங்களில் 8152 அலுவலர்கள் பணியாற்ற உள்ளார்கள். வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் தேர்தல் பணியாளர்கள் எளிதில் வாக்குச்சாவடிக்கு செல்ல ஏதுவாக 5 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் 5 தேர்தல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் அனைத்து அடிப்படை வசதிகளும் மண்டல தலைவர்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 1104 வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 199 பதட்டமான வாக்குச்சாவடி மையங்கள் அடங்கும்.

இந்த பதட்டமான வாக்குச்சாவடி மையங்களை நுண்பார்வையாளர்கள் மூலம் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 650 வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடிக்குள் சென்று வாக்களிக்க ஏதுவாக ஒரு தன்னார்வலர் மற்றும் சக்கர நாற்காலி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு மாதிரி வாக்குச்சாடிகளும், பெண்கள் மட்டுமே பணியாற்றும் ஒரு வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பிய வாக்குரிமை பெற்ற அனைத்து வாக்காளர்களும் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்து உங்களுடைய ஜனநாயக கடமையினை ஆற்ற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு கூறினார்.

நடைபெற்ற ஆய்வில் உதவி தேர்தல் அலுவலர் மற்றும் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் காளீஸ்வரி மற்றும் துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story