அங்கேரிப்பாளையம் கொங்கு வேளாளர் மேல்நிலைப் பள்ளியில் கல்லூரி கனவு நிகழ்ச்சி

அங்கேரிப்பாளையம் கொங்கு வேளாளர் மேல்நிலைப் பள்ளியில் கல்லூரி கனவு நிகழ்ச்சி

கல்லூரி கனவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் 

அங்கேரிப்பாளையம் கொங்கு வேளாளர் மேல்நிலைப் பள்ளியில் கல்லூரி கனவு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பூர் அங்கேரிபாளையம் கொங்கு வேளாளர் மேல்நிலைப் பள்ளியில் திருப்பூர் வடக்கு, அவிநாசி மற்றும் ஊத்துக்குளி வட்டார வள மையப்பகுதிக்குட்பட்ட 12-ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு -2024 நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கி பேசினார். மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு, மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசியதாவதுநான் முதல்வன் திட்டம் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்கான விரிவான மற்றும் பயனுள்ள வழிகாட்டுதலை வழங்குவதற்காக அர்பணிப்பு முயற்சியாக வளர்ந்து வருகிறது.

இந்த திட்டமானது சரியான வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுடன் அவர்கள் தேர்தெடுத்த துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய ஏராளமான அரசுப்பள்ளி மாணவர்களின் திறனை அங்கீகரிக்கிறது. நான் முதல்வன் திட்டத்தின் முக்கிய நோக்கம் அனைத்து மாணவர்களும் தங்கள் பள்ளிக் கல்வியை முடித்தவுடன் உயர்கல்வி படிப்புகளை தொடர வழிவகை செய்வதாகும்.

12-ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் தங்களின் எதிர்கால கனவினை நனவாக்கும் வகையில் அவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகள் உள்ள பாடப்பிரிவு வாரியான பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள் மற்றும் கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதையும். மேல் படிப்பினை முடித்தவுடன் கிடைக்கும் வேலை வாய்ப்புகள் போன்ற விவரங்களை வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்படவுள்ளது.

இத்தகைய நிகழ்ச்சிகள் மாணவர்களின் எதிர்கால குறிக்கோளை திட்டமிட்டு அடையவும். வெற்றி பெறவும் வழிவகை செய்யும். திருப்பூர் மாவட்டத்தில் 23 ஆயிரத்து 242 மாணவ, மாணவியர்கள் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தைப் பெற்றது. குறிப்பாக அரசுப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் முதலிடத்தை பெற்றது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உழைப்புக்கு கிடைத்த வெற்றியாகும். தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும் உயர்கல்வியில் சேர்ந்து நன்றாக பயில வேண்டும் என இத்தருணத்தில் கேட்டுக் கொள்கிறேன். பள்ளியில் நன்றாக படித்ததை போன்று மாணவ&மாணவிகள் கல்லூரியில் நன்றாக படித்து எதிர்காலத்தை சிறந்த முறையில் தேர்தெடுக்க வேண்டும். அனைத்து மாணவர்களும் கல்லூரில் சேர்வதற்கான ஆலோசனைகளை ஆசிரியர்கள் வழங்கி வருகிறார்கள். மேலும், இக்கல்லூரி கனவு நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளைச் சார்ந்த உயர் அலுவலர்கள் மற்றும் துறை வல்லுநர்கள் கலந்து கொண்டு 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவுள்ளார்கள். எனவே மாணவர்களாகிய நீங்கள் கல்லூரி கனவு நிகழ்ச்சியில் பல்வேறு கருத்துக்களை வழங்கவுள்ள துறை சார்ந்த வல்லுனர்கள் மற்றும் கல்வியாளர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை கேட்டறிந்து உயர்கல்வி பயில வேண்டும்.

அனைத்து மாணவர்களும் உயர்கல்வியில் சேர்ந்து நமது மாவட்டத்திற்கு சிறப்பு மிக்க நிகழ்வை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அதனைத்தொடர்ந்து, எதிர்காலத்தில் எந்தெந்த துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ள தொழில் நுட்பத்திற்கேற்ப மாணவ, மாணவியர்கள் தங்களது திறன்களை எவ்வாறு மென்மேலும் வளர்த்துக் கொள்ளலாம் உள்ளிட்ட பல்வேறு பயனுள்ள தகவல்களை துறை வல்லுனர்கள் மற்றும் கல்வியாளர்கள் இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி கீதா, உதவி இயக்குநர் (திறன் பயிற்சி) ஜெயக்குமார், மேலாளர் (மாவட்ட முன்னோடி வங்கி) ரவி, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் சுரேஷ், மாவட்ட கல்வி அலுவலர் பக்தவாச்சலம், முதல்வர் (அரசினர் தொழில் பயிற்சி மையம்) ஜி.பிரபு, துறை சார்ந்த வல்லுனர்கள். கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story