மின் ஊழியரை தாக்கிய கல்லுாரி மாணவர்கள்

மின் ஊழியரை தாக்கிய கல்லுாரி மாணவர்கள்

வழக்கு 

மின் ஊழியரை தாக்கிய கல்லுாரி மாணவர்கள் மீது வழக்கு பதிந்து செங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.
செங்குன்றம், ஆர்.ஜி.என்., காலனி அருகே, ஜி.என்.டி., சாலையில், அதே பகுதியைச் சேர்ந்த முனியாண்டி, 60, என்பவரின் சைக்கிள் விற்பனை கடை உள்ளது. இந்த கடைக்கான மின் கட்டணத்தை, இரண்டு ஆண்டுகளாக செலுத்தாமல் இருந்துள்ளார். இதனால், செங்குன்றம் மின்வாரிய அலுவலகத்தின் கணக்கீட்டு ஆய்வாளரான பார்த்திபன், 56, உயரதிகாரிகளின் உத்தரவின்படி நேற்று முன்தினம், மேற்கண்ட சைக்கிள் விற்பனை கடையின், 'பியூஸ் கேரியரை' கைப்பற்றினார். பின், மின்கட்டண நிலுவைத் தொகையை செலுத்தி, பீயூஸ் கேரியரை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தினார். அப்போது, அங்கிருந்த முனியாண்டி, அவரது மகனும் சட்டக்கல்லுாரி மாணவருமான திக் விஜய், 26, மருத்துவக் கல்லுாரி இறுதியாண்டு மாணவரான அவரது தம்பி சரவண பெருமாள், 24, ஆகியோர், பார்த்திபனை சரமாரியாக தாக்கி, கீழே தள்ளியுள்ளனர். திடீர் தாக்குதலால் மயங்கி விழுந்த அவரை, அங்கிருந்தோர் மீட்டு பாடியநல்லுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்த புகாரின்படி, மேற்கண்ட மூவர் மீதும் வழக்கு பதிந்து செங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags

Next Story