கடல்பசு பாதுகாப்பு தொடர்பான சமுதாய விழிப்புணர்வு கூட்டம் 

கடல்பசு பாதுகாப்பு தொடர்பான சமுதாய விழிப்புணர்வு கூட்டம் 

கடல் பசு பாதுகாப்பு கூட்டம்

தஞ்சாவூர் மாவட்டம், புதுப்பட்டினத்தில் அழிந்து வரும் அபூர்வ வகை கடல்வாழ் உயிரினமான கடற்பசு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே புதுப்பட்டினம் கடலோர கிராமத்தில், தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்திற்கான பசுமைத் திட்டம் சார்பில் மீனவர்களுக்கு கடல் பசு பாதுகாப்பு தொடர்பான சமுதாய விழிப்புணர்வு கூட்டம் ஞாாயிற்றுக்கிழமை நடந்தது. தஞ்சாவூர் மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இக்கூட்டத்தில், பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் சந்திரசேகரன் கலந்து கொண்டு, மீனவர்களிடம் பேசுகையில்,

"அபூர்வ வகை கடல் வாழ் உயிரினமான கடற்பசு, கடல் வளத்தை பாதுகாக்கும் முக்கியமான உயிரினமாக திகழ்கிறது. இப்பகுதியில் காணப்படும் இந்த அபூர்வ உயிரினத்தை காப்பாற்றும் வகையில் மனோரா பகுதியை தலைமை இடமாகக் கொண்டு, தமிழ்நாடு அரசு கடற்பசு பாதுகாப்பு மையம் அமைக்க திட்டமிட்டுள்ளது.

கடற்பசுவை காப்பாற்றி உயிருடன் கடலில் விட்ட மீனவர்களை பாராட்டுகிறேன். கடற்பசுவின் முக்கியத்துவத்தை உணர்ந்து மீனவர்கள் அனைவரும் அதனை பாதுகாக்க வேண்டும்" என்றார். மேலும், மீனவர்கள் வலையில் சிக்கிய அபூர்வ வகை கடல்வாழ் உயிரினமான கடற்பசுவை காப்பாற்றி கடலுக்குள் விடும் மீனவர்களுக்கு ரொக்கப் பரிசு, சான்றிதழ், பதக்கம் வழங்கப்படும் தெரிவித்தார். இதில், நாட்டுப்படகு சங்க தலைவர் ஜெயபால், ஊராட்சி தலைவர்கள் அமீர்முகைதீன், ரகமத்துல்லா, ஓம்கார் பவுண்டேஷன் அன்பு, வனவர் சிவசங்கர், வனக்காப்பாளர்கள் சபரிநாதன், மணவாளன், கிராம மீனவ தலைவர்கள், மீனவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் கழுமங்குடா, செந்தலைவயல், கணேசபுரம், வள்ளுவர்புரம், சோமநாதபட்டினம் ஆகிய மீனவ கிராமங்களில் கடற்பசு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Tags

Next Story