திமுக அதிமுக இடையே தான் போட்டி: எஸ்.பி. வேலுமணி

திமுக அதிமுக இடையே தான் போட்டி: எஸ்.பி. வேலுமணி

அதிமுக கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

வேட்பாளராக நிறுத்த திமுகவில் ஆட்களே இல்லையா? என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் பகுதியில் கோவை, பொள்ளாச்சி,நீலகிரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி,முன்னாள் துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்,அதிமுக வேட்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ”எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பதவியேற்ற பின்னர் நடக்கும் முதல் தேர்தல் என்பதால் இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் எனவும் நீலகிரி வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்,

கோவை வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்,பொள்ளாச்சி வேட்பாளர் கார்த்திக் அப்புசாமி ஆகியோருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டு கொண்டார். களத்தில் யார் இருந்தாலும் நாம் தான் வெற்றி பெறுவோம் என்றவர் மூன்று வேட்பாளர்களும் இலட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற அவர் நமது வேட்பாளர்கள் மூவருக்கும் எம்ஜிஆர்,ஜெயலதிதா ஆசி உள்ளதாக தெரிவித்தார்.

அதிமுக கட்சியை‌ பல பேர் அழிக்க நினைத்தும் அவர்களால் அழிக்க முடியவில்லை எனவும் வெற்றி பெறுவது நாம் தான் அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம் எனவும் மற்ற வேட்பாளர்கள் எல்லாம் தூசு என்றவர் அதிமுக பக்கத்தில் கூட வர முடியாது என்றார்.சமூக வலைதளத்தில் பதிவுகள் போட்டு கொண்டிருந்தால், பெரிய ஆளாக முடியாது எனவும் அதிமுக வலுவான கட்சி என்றவர் அதிமுக வெற்றி பெறுவது உறுதி என தெரிவித்தார். திமுக சார்பில் போட்டியிடும் கணபதி ராஜ்குமார் யார்? எனவும் அம்மா அவருக்கு மேயர்,மாவட்ட செயலாளராக வாய்ப்பு தந்தவர்

ஆனால் இந்த கட்சிக்கு துரோகம் செய்து விட்டு திமுகவில் இணைந்து விட்டார் எனவும் வேறு வேட்பாளர்கள் நிறுத்த திமுகவில் ஆளே இல்லையா? என கேள்வி எழுப்பியவர் திமுகவில் வேட்பாளராக தகுதி யாருக்கும் இல்லை என்றார்.வரும் தேர்தலில் திமுக-அதிமுக இடையே போட்டி தான் எனவும் ஆனால் திமுக வேட்பாளர் டம்மி என்றவர் கரூரில் போட்டியிடாமல் அண்ணாமலை கோவையில் நிற்பதாகவும் பாஜகவிற்கு 4 சதவீத ஓட்டு மட்டுமே உள்ளது என்ற அவர் கூட்டணியில் உள்ள பாமக,தமாகா கட்சிகளுக்கு ஓட்டு உள்ளதா? எனவும்

அவர்கள் தீவிரமாக வேலை செய்து 10 சதவீத ஓட்டு வாங்கினால் ஜெயிக்க முடியுமா? எனவும் அதிமுக உலகத்தில் 7 வது பெரிய கட்சி இந்தியாவின் மிகப் பெரிய கட்சியான அதிமுக 34 சதவீத வாக்குகள் கொண்ட கட்சி எனவும் பின்னர் தான் மற்ற கட்சிகள் என்றார். பாமக, பாஜக கட்சிகள் அதிமுக உடன் கூட்டணி வைத்து தான் வளர்ந்தார்கள் என்றவர் அதிமுக தொண்டர்கள் தர்மப்படி, நியாயப்படி நடப்பார்கள் எனவும்,

கருத்து கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்பு செய்கிறார்கள் எனவும் அதிமுகவை விட பாஜக அதிக இடங்களை பெறும் என்ற பிம்பத்தை உருவாக்க பார்க்கிறார்கள் அப்படி எல்லாம் நடக்காது என்றார்.மூன்று வருட திமுக ஆட்சியும் 10 ஆண்டு கால பாஜக ஆட்சியும் கோவைக்கு என்ன செய்தது? என கேள்வி எழுப்பியவர் கோவைக்கு அதிக திட்டங்கள் தந்தது அதிமுக தான் எனவும் மக்களுக்கு எதுவும் செய்யாமல் எப்படி ஓட்டு கேட்க வர முடியும்? எனவும் நமக்கு மட்டுமே காலரை தூக்கிவிட்டு ஓட்டு கேட்டுச் செல்ல தகுதி உள்ளது என்றும் மற்றவர்களுக்கு ஓட்டு கேட்டு வர தகுதியே இல்லை என்றார். திமுகவினரே திமுகவிற்கு ஓட்டு போட தயாராக இல்லை எனவும்,

அதிமுக வெற்றி உறுதி இருப்பினும் எதிரியை குறைவாக மதிப்பிட்டு விடக்கூடாது என்றவர் கூட்டணி கட்சியினரை அரவணைத்து செல்ல வேண்டும் எனவும் நமக்கு எதிரி திமுக மட்டுமே மற்றவர்கள் எல்லாம் மூன்றாவது தான்.நிறைய கட்சிகள் நம்மிடம் கூட்டணி பேசிக்கொண்டே துரோகம் செய்துவிட்டு சென்றுள்ளார்கள் அவர்களுக்கு நாம் யார் என காட்ட வேண்டும் என்றும் கட்சிக்கு விசுவாசமாக வேலை செய்ய வேண்டும் என்றார்.

எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளரான பின்னர் நடக்கும் முதல் தேர்தல் இது எனவும் போட்டியிடும் திமுக,பாஜக வேட்பாளர்கள் அதிமுக வேட்பாளர்களுக்கு இணை இல்லை” எனத் தெரிவித்தார்.

Tags

Next Story