விஜயகாந்துக்கு இரங்கல்: அனைத்து கட்சி சார்பில் மௌன அஞ்சலி ஊர்வலம்

விஜயகாந்துக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் திருச்சியில் அனைத்து கட்சி சார்பில் மௌன அஞ்சலி ஊர்வலம் நடந்தது.

நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் கடந்த 28-ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். திரைப் பிரபலங்களும் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். தேசிய தலைவர்கள் முதல் உள்ளூர் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள தேமுதிக கட்சி தொண்டர்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் மறைந்த விஜயகாந்த்க்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் திருச்சியில் அனைத்து கட்சிகள் சார்பில் மௌன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது. திருச்சி மாநகர் மாவட்ட தேமுதிக செயலாளர் டி.வி.கணேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த மௌன அஞ்சலி ஊர்வலமானது திருச்சி அண்ணா சிலையில் இருந்து துவங்கியது.

சத்திரம் பேருந்து நிலையம், தெப்பக்குளம், மேலப்புலிவார்டு ரோடு வழியாக சென்ற இந்த ஊர்வலம், மரக்கட்டை எம்ஜிஆர் சிலை அருகே நிறைவடைந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் திருவுருவ படத்திற்கு அனைத்து கட்சி சார்பில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த ஊர்வலத்தில் மலைக்கோட்டை பகுதி தி.மு.க. செயலாளர் மெடிக்கல் மோகன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாநகர மாவட்ட செயலாளர் இன்டர்நெட் ரவி, பா.ஜ.க. மாநகர மாவட்ட துணைத்தலைவர் ஜெய் கர்ணா, திருச்சி மாநகர மாவட்ட பாஜக தலைவிரேகா, ம.தி.மு.க. புறநகர் மாவட்ட செயலாளர்டி.டி.சி.சேரன், அ.தி.மு.க. முன்னாள் மாமன்ற உறுப்பினர், வர்த்தக அணி செயலாளர் ஜெரால்டு, 20 வது வார்டு மாமன்ற உறுப்பினர் எல்.ஐ.சி. சங்கர் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story