மாநகராட்சியில் தொடரும் நிர்வாக குளறுபடியால் சலசலப்பு

மாநகராட்சியில் தொடரும் நிர்வாக குளறுபடியால் சலசலப்பு

 நிர்வாக குளறுபடியால் சலசலப்பு

காஞ்சிபுரம் மாநகராட்சியில் அரசியல்வாதிகளின் ஆதிக்கம், கமிஷன் பிரச்னை, டெண்டர், உட்கட்சி பூசல் என நிர்வாக ரீதியிலான குளறுபடிகள் தொடர்ந்தபடி உள்ளன. இதனால், மேயர் தரப்புக்கு பல வகையில் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சியில் நான்கு மண்டலங்களின் கீழ் 51 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க.,வைச் சேர்ந்த 9வது வார்டு கவுன்சிலர் மகாலட்சுமி, மேயராகவும், காங்., கட்சியைச் சேர்ந்த குமரகுருநாதன் துணை மேயராகவும் செயல்பட்டு வருகின்றனர். மாநகராட்சி தேர்தல் நடந்தது முதலே பல்வேறு அரசியல் நகர்வுகளும், நிர்வாக குளறுபடிகளும், உட்கட்சி பூசல்களும் இப்போது வரை தொடர்ந்தபடி உள்ளன. மாநகராட்சி கூட்டம் கடந்த அக்டோபர் 5ம் தேதி நடந்தது. இதையடுத்து நவம்பரில் கூட்டம் நடைபெறவில்லை. டிச., 6ம் தேதி கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. வெளிநடப்பு அப்போது, கமிஷனர் செந்தில்முருகன் தங்களை மதிக்கவில்லை எனக்கூறி தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்களை தொடர்ந்து அ.தி.மு.க., கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்ததால், போதிய கவுன்சிலர்கள் இன்றி கூட்டம் நடத்த முடியாமல் போனது. இதனால், கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டிய 86 தீர்மானங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, மாநகராட்சி கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளாட்சி துறையின் விதி. அக்., 5க்கு பின், 2024 ஜன., 5க்குள் கூட்டம் நடத்த வேண்டிய கட்டாயத்தில், மேயர் மகாலட்சுமி உள்ளார். தி.மு.க., கவுன்சிலர்கள் மீண்டும் வெளிநடப்பு செய்தால், மீண்டும் பிரச்னை எழுமோ என மேயர் மற்றும் ஆதரவு கவுன்சிலர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர். இன்னும் ஒரு வாரத்திற்குள் மாநகராட்சி கூட்டம் நடத்த முடிவு செய்திருப்பதாக கவுன்சிலர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story