ஒப்பந்த தூய்மைப்பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

ஒப்பந்த தூய்மைப்பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

தஞ்சை மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப்பணியாளர்களின் போராட்டத்தால் பரபரப்பு உண்டானது.

தஞ்சை மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப்பணியாளர்களின் போராட்டத்தால் பரபரப்பு உண்டானது.

தஞ்சாவூர் மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியத்தை வழங்கக் கோரி பணிகளை புறக்கணித்து, வெள்ளிக்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினர்.

தஞ்சாவூர் மாநகராட்சியில் தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் 344 தூய்மை பணியாளர்களும், 46 ஓட்டுநர்களும், 35 புதை சாக்கடை திட்ட பணியாளர்களும் கடந்த 13.4.2023 முதல் பணியாற்றி வருகின்றனர். இப்பணியாளர்கள் தஞ்சாவூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 51 வார்டுகளிலும் சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பணியாளர்களுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட தினக்கூலி ரூ.590 ஐ பிடித்தம் இல்லாமல் வழங்க வேண்டும். இஎஸ்ஐ, வருங்கால வைப்பு நிதி, போன்றவை பிடித்தம் செய்ய வேண்டும். பிரதி மாதம் 5- ம் தேதிக்குள் ஊதியத்தை வழங்க வேண்டும். ஊதியம் வழங்கியதற்கான சம்பள பட்டியலை வழங்க வேண்டும். பணியாளர்களுக்கு சீருடைகள், பாதுகாப்பு உபகரணங்கள், 8 மணி நேரம் வேலை மட்டுமே வழங்க வேண்டும், தூய்மை பணியாளர்களுக்கான நலவாரிய அடையாள அட்டையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பணியாளர்கள் வெள்ளிக்கிழமை காலை முதல் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தூய்மைப் பணியாளர்கள் சங்கம் சார்பாக வழக்கறிஞர் பிரகாஷ் மற்றும் பிரதிநிதிகள் வெள்ளிக்கிழமை மதியம் மாநகராட்சி ஆணையர் ஆர்.மகேஸ்வரியை சந்தித்து கோரிக்கைகள் தொடர்பாக மனுவை வழங்கி பேசினர். அப்போது ஆணையர் மகேஸ்வரி, பணியாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிச்சயமாக நிறைவேற்றித் தரப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து பணியாளர்கள் போராட்டத்தை பிற்பகல் விலக்கிக் கொண்டனர்.

Tags

Next Story