சாலையில் பொங்கல் வாழ்த்து எழுதியதில் தகராறு: இளைஞர் அடித்துக் கொலை

சாலையில் பொங்கல் வாழ்த்து எழுதியதில் தகராறு: இளைஞர் அடித்துக் கொலை
கோப்பு படம் 
தஞ்சை அருகே சாலையில் பொங்கல் வாழ்த்து எழுதியதில் தகராறில் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

தஞ்சாவூர் அருகே சாலையில் பொங்கல் வாழ்த்து எழுதியது தொடர்பாக திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட தகராறில் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் சாலைக்காரத் தெரு உரக்கடை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பூண்டித் தெருவைச் சேர்ந்த அண்ணாதுரை மகன் அசோக்குமார் (36), பால்ராஜ் மகன் முனியப்பன் (27), சந்திரன் மகன் அய்யப்பன் ஆகியோர் பொங்கல் வாழ்த்து என சுண்ணாம்பால் எழுதிக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த அருள்மொழிப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் பாலமுருகன் (22), ரவி மகன் ஆகாஷ் (24) வழிவிடுமாறு கூறினராம். இதைத்தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதன் பின்னர் பாலமுருகனும், ஆகாஷும் புறப்பட்டு தங்களது கிராமத்துக்குச் சென்று, திங்கள்கிழை அதிகாலை 1.30 மணியளவில் மேலும் சிலரை திரட்டிக் கொண்டு மாரியம்மன் கோவில் சாலைக்காரத் தெருவுக்கு வந்தனர்.

அங்கிருந்த அசோக்குமாரையும், முனியப்பனையும் கட்டையால் தாக்கினர். இதனால் பலத்த காயமடைந்த அசோக்குமார் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த முனியப்பன் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து தஞ்சாவூர் தாலுகா காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து ஆகாஷ் (24), பாலமுருகன் (22), இவரது அண்ணன் பாலகுமார் (24), பாஸ்கர் மகன் விஜய் (23), சதீஷ்குமார் (29), வினோத் (27) ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story