கார் -பைக் மோதலில் தூக்கி வீசப்பட்டு பலியான தம்பதி : சிசிடிவிகாட்சி

மயிலாடுதுறை அருகே தரங்கம்பாடி கடைவீதி சாலையில் அதிவேகமாக வந்த கார் எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதிய கோர விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்த நிலையில் அவர்களின் இரண்டு வயது குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பூம்புகார் அருகே வானகிரி மீனவர் கிராமம் சுனாமி நகர் பகுதியில் சேர்ந்த ஸ்ரீதர் (22) தனது மனைவி சசிகலா மற்றும் 2 வயது மகன் பாரத் சஞ்ஜன் ஆகியோருடன் தரங்கம்பாடி சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சென்னையில் இருந்து வேளாங்கண்ணிக்கு அதிவேகமாக சென்ற ( NISAN MICRA ) கார் ஒன்று ஸ்ரீதர் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த ஸ்ரீதருக்கு தலையில் பலத்த அடிப்பட்டும், மனைவி சசிகலாவுக்கு தலை, வலது கையிலும், குழந்தை பாரத் சஞ்ஜன் இடுப்பில் அடிப்பட்டு சாலையில் உயிருக்கு போராடி கிடந்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொறையார் போலீசார் அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் பொறையார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக நாகப்பட்டினம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் ஸ்ரீதர் அவரது மனைவி சசிகலா உயிரிழந்தனர். குழந்தை பாரத் சஞ்ஜன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தை ஏற்படுத்திய சென்னையைச் சேர்ந்த கார் ஓட்டுநர் அருள்சாலமன் (43) என்பவரை போலீசார் கைது செய்து காரை பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விபத்துக்கான வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். இந்நிலையில் கார் மற்றும் இருசக்கர வாகனம் மோதிக் கொள்ளும் சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story