செண்பகத்தோப்பு கோவில்களுக்கு செல்ல வனத்துறை கட்டணம் வசூலிக்க நீதிமன்றம் தடை

செண்பகத்தோப்பு கோவில்களுக்கு செல்ல  வனத்துறை கட்டணம் வசூலிக்க நீதிமன்றம் தடை

கட்டணம் வசூலிக்க தடை 

செண்பகத்தோப்பு கோவில்களுக்கு செல்ல நுழைவுக் கட்டணம் அமலில் இருந்து நிலையில் வனத்துறை கட்டணம் வசூலிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் , ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு ஸ்ரீ நாச்சியார் என்ற ஆண்டாள் திருக்கோவிலின் செயல் அலுவலர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "அருள்மிகு ஸ்ரீ நாச்சியார் திருக்கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பேச்சியம்மன் கோவில் மற்றும் காட்டழகர் கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களுக்கான நுழைவு கட்டணம் வசூலிப்பது தொடர்பான மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் செண்பகத்தோப்பு சூழல் மேம்பாட்டு குழு மற்றும் அய்யனார் கோவில் சூழல் மேம்பாட்டு குழு உறுப்பினர்கள், வாகனங்களிடம் நுழைவுக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் இவ்வாறு கட்டணம் வசூலிப்பது ஏற்கத்தக்கது அல்ல. ஆகவே ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு பேச்சி அம்மன் திருக்கோவில் மற்றும் அருள்மிகு காட்டழகர் திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் நுழைவுக் கட்டணம் வசூலிப்பது தொடர்பான மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பை ரத்து செய்வதோடு,அதன் அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி விஜயகுமார், ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு பேச்சி அம்மன் திருக்கோவில் மற்றும் அருள்மிகு காட்டழகர் திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் வனத்துறை நுழைவுக் கட்டணம் வசூலிப்பது தொடர்பான மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தும்,ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

Tags

Next Story