திருவண்ணாமலை கோவிலில் சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் தீபத் திருவிழா நிறைவு

திருவண்ணாமலை கோவிலில் சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் தீபத் திருவிழா நிறைவு

திருவண்ணாமலை கோவிலில் சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் தீபத் திருவிழா நிறைவு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் தீபத் திருவிழா நிறைவு பெற்றது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 14-ந் தேதி தொடங்கியது. காவல் தெய்வம் துர்க்கை அம்மன், பிடாரி அம்மன், விநாயகர் உற்சவத்தை தொடர்ந்து, கடந்த 17-ந்தேதி கொடியேற்றம் நடைபெற்றது. இதையடுத்து பஞ்சமூர்த்திகளின் 10 நாள் உற்சவம் ஆரம்பமானது.

இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக, கடந்த 26-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு மூலவர்சந்நிதி முன்பு பரணி தீபமும், 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்பட்டது. இதையடுத்து ஐயங்குளத்தில் 3 நாள் தெப்பல் உற்சவம் நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. சந்திரசேகரர், பராசக்தி அம்மன், முருகர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர். அண்ணாமலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீப தரிசனம் 5வது நாளாக நேற்றும் பிரகாசித்தது. ஜோதி வடிவமாக காட்சி கொடுத்த அண்ணாமலையாரை பக்தர்கள் தரிசனம் செய்தனர். 11 நாட்களுக்கு மகா தீபத்தை பக்தர்கள் தரிசிக்கலாம். மலை உச்சியில் இருந்து 12-வது நாள், மகா தீப கொப்பரை அண்ணாமலையார் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும்.

பின்னர், கொப்பரையில் இருந்து சேகரிக்கப்பட்ட தீப மை, ஆரூத்ரா தரிசனத்தில் நடராஜருக்கு சாற்றப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் 17 நாட்களாக நடைபெற்று வந்த கார்த்திகை தீபத் திருவிழா, சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் நேற்று இரவு நிறைவு பெற்றது. வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய சாமி, மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Tags

Next Story