செயல்பாட்டுக்கு வராத பேருந்து நிலையம் - பயணிகள் அவதி !
![செயல்பாட்டுக்கு வராத பேருந்து நிலையம் - பயணிகள் அவதி ! செயல்பாட்டுக்கு வராத பேருந்து நிலையம் - பயணிகள் அவதி !](https://king24x7.com/h-upload/2024/07/04/570891-bus-stand.webp)
பேருந்து நிலையம்
இளையான்குடி பேரூராட்சியில் அரசு மருத்துவமனை அருகே பஸ் ஸ்டாண்ட் குறுகிய இடத்தில் செயல்பட்டது. போதிய இட வசதி இல்லாத காரணத்தால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர். குறுகலான இடத்தில் பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டதால் நகர் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இளையான்குடி மக்கள் இந்த பஸ் ஸ்டாண்டுடன் அருகில் உள்ள பழைய பேரூராட்சி அலுவலக கட்டடத்தையும் இடித்துவிட்டு இப்பகுதியிலேயே பஸ் ஸ்டாண்டை விரிவுபடுத்த வேண்டுமென்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தனர்.
பழைய இடத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டால் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண முடியாது என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் இளையான்குடி-சிவகங்கை சாலையில் புதிதாக இடம் தேர்வு செய்யப்பட்டு ரூபாய் 3.75 கோடி செலவில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி துவங்கியது. இதற்கு இளையான்குடி பகுதியைச் சேர்ந்த சிலர் எதிர்ப்புதெரிவித்து வந்தனர். எனினும் பணிகள் முடிவு பெற்று கடந்த பிப்ரவரியில் முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். திறந்து வைக்கப்பட்டு 4 மாதங்களாகியும் புதிய பஸ் ஸ்டாண்ட் செயல்பாட்டிற்கு வரவில்லை. இதனால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்