வாக்குச் சீட்டுகள் கருவூலத்தில் ஒப்படைப்பு

திருச்சி மக்களவைத் தொகுதியில் விவிபேட் இயந்திரங்களில் பதிவான வாக்குச் சீட்டுகள் தனியாக கட்டப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

திருச்சி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட 6 பேரவைத் தொகுதிகளிலும் 1,665 வாக்குச் சாவடிகளிலும் தலா ஒரு விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த இயந்திரங்களில் பதிவான வாக்குகள் குலுக்கல் அடிப்படையில் தோ்வு செய்யப்பட்டு வாக்கு எண்ணும் பணியின்போது சரிபாா்க்கப்பட்டது. அதன்படி, 6 பேரவைத்தொகுதிகளிலும் தலா 5 வாக்குச் சாவடிகளில் விவிபேட் இயந்திரத்தில் பதிவான வாக்குச் சீட்டுகள் எடுத்து எண்ணப்பட்டன. மொத்தம் 30 வாக்குச் சாவடிகளில் இந்த முறையில் வாக்குச் சீட்டுகள் எண்ணப்பட்டு, அவை அந்த வாக்குச் சாவடியில் பதிவான மின்னணு இயந்திர வாக்குடன் ஒப்பிட்டு சரிபாா்க்கப்பட்டது. இதில், 30 வாக்குச் சாவடிகளிலும் இரு நிலைகளில் வாக்குகள் சரியாக இருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து விவிபேட் இயந்திரங்கள் அனைத்து பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டது. இருப்பினும், அதில் பதிவான வாக்குச் சீட்டுகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு தனித்தனியாக கறுப்பு பைகளில் கட்டி, மூடி சீல் வைத்து கருவூலத்தில் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது. தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்பேரில், முதல்முறையாக இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விவிபேட் இயந்திரத்தில் பதிவான வாக்குச் சீட்டுகளை எண்ண வேண்டியிருந்தால் அதற்கு தயாராக இருக்கும் வகையில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தோ்தல் பிரிவு அலுவலா்கள் தெரிவித்தனா்.

Tags

Next Story