உயர்மட்ட பாலம் அமைக்க கோரிக்கை

உயர்மட்ட பாலம் அமைக்க கோரிக்கை

சாலைகளில் வெள்ளம் 

அமுதுண்ணாகுடி ஊராட்சியில்  உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமுதுண்ணாகுடி கிராம மக்கள் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம் அமுதுண்ணாகுடி ஊராட்சியில் உள்ள வடக்கு அமுத்துண்ணாகுடி கிராமத்தில் சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். எங்கள் ஊருக்கு செல்லும் சாலையானது கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் போடப்பட்டது. தற்போது மிகவும் பழுதான நிலையில் காணப்படுகிறது. மேலும் எங்கள் ஊரின் நடுவே கருமேனி ஆறு செல்கிறது.

இதனால் மழைக்காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் ஊரைவிட்டு வெளியே செல்லமுடியாத நிலை ஏற்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுத்து எங்கள் ஊருக்கு செல்லும் சாலை மற்றும் உயர்மட்ட பாலம் உடனே அமைத்து தரும்படி கேட்டுக் கொள்கிறோம். மேலும் எங்கள் ஊருக்கு 10 நாட்களுக்கு மேலாக குடிதண்ணீர் வழங்கப்படவில்லை, வீடுகளுக்கு இன்னும் குடிதண்ணீர் இணைப்பும் வழங்கப்படவில்லை என்பதையும் தங்களுக்கு தெரிவித்து கொள்கிறோம் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story