மதுராந்தகத்தில் பயன்பாடற்ற வேளாண் இயந்திரங்களை பொதுஏலம் விட கோரிக்கை
பயன்பாடற்ற இயந்திரங்கள்
மதுராந்தகத்தில் வேளாண் பொறியியல் விரிவாக்க மையம் செயல்படுகின்றது. இங்கு, வேளாண் பொறியியல் துறை வாயிலாக,'உழவன்' செயலியில்பதிவு செய்யும் விவசாயிகளுக்கு, குறைந்த விலையில் வேளாண் பணிகளுக்கு தேவைப்படும் அனைத்து வகையான இயந்திரங்களும் வாடகைக்கு வழங்கப்படுகின்றன.
தற்போது, மதுராந்தகம், அச்சிறுபாக்கம், லத்துார், சித்தாமூர் ஒன்றியங்களில், நெல் அறுவடை மற்றும் கோடை உழவுப்பணியில் நிலங்களை தயார் செய்யும் பணிகள் நடந்துவருகின்றன. மதுராந்தகம் வேளாண் பொறியியல் துறைக்கு சொந்தமாக, உழவுடிராக்டர், பொக்லைன் இயந்திரம்,
நெல் அறுவடை இயந்திரம், கரும்புவெட்டும் இயந்திரங்கள் உள்ளன. இவற்றில், சிலஆண்டுகளாக, பொறியியல் துறை அலுவலகவளாகப்பகுதியில், பயன்பாடு அற்று, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இயந்திரங்கள் துருப்பிடித்து வீணாகி வருகின்றன.
எனவே, பயன்பாடற்ற வேளாண் இயந்திரங்களை பொது ஏலம் விட, துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.