நூறுநாள் வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனு

நூறுநாள் வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் எனக் கேட்டு, மாநிலம் தழுவிய இயக்கத்தின் ஒரு பகுதியாக வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சேதுபாவாசத்திரம் ஒன்றியத் தலைவர் எஸ்.ஜெ.ராஜேஷ்கண்ணா தலைமையில், சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சடையப்பனிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் நிபந்தனை இன்றி உடனடியாக வேலை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இதேபோல், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாகவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 100 நாள் வேலையை உடனடியாக தொடங்கி வேலை வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்" இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது. அப்போது, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ஏ.மேனகா, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஒன்றியத் தலைவர் வீ.கருப்பையா, தென்னை விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.எஸ். வேலுச்சாமி மற்றும் நிர்வாகிகள் பி.பெரியண்ணன், சகாபுதீன், ஜோதிலெட்சுமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். தஞ்சாவூர் தஞ்சை ஒன்றியம், குருங்குளம், ஆலக்குடி, கள்ளப்பெரம்பூர் ஆகிய ஊராட்சிகளின் கிளைகளின் சார்பில், தஞ்சை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியச் செயலாளர் ஏ.சாமியப்பன் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது. இதில் தஞ்சை மாவட்ட செயலாளர் பி.எம்.இளங்கோவன், மாவட்ட துணைச் செயலாளர் சி.ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story